இந்தியா

இந்தியாவில் முதலீடு செய்ய பிரான்ஸ் நிறுவனங்களுக்கு மோடி அழைப்பு!

இந்தியாவில் கிடைக்கும் பரந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், தொழில்நுட்பம், புதுமை மற்றும் நிலையான வளர்ச்சி போன்ற துறைகளில் ஒத்துழைக்கவும் பிரான்ஸ் நிறுவனங்களை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

பாரிஸில் நடந்த 14 ஆவது இந்தியா-பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவுடனான தங்கள் கூட்டாண்மையை ஆழப்படுத்த பிரான்ஸ் வர்த்தகர்களுக்கு அழைப்பும் விடுத்தார்.

அண்மைய வரவு செலவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களின் தொடர்ச்சியை எடுத்துரைத்த அவர், முதலீடுகளை அதிகரிப்பதற்கும் வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கும் அவற்றின் திறனையும் இதன்போது வலியுறுத்தினார்.

Image

அன்னிய முதலீட்டை ஈர்ப்பதில் இந்தியாவின் முற்போக்கான அணுகுமுறையை அடிக்கோடிட்டுக் காட்டிய மோடி, காப்பீட்டுத் துறையை 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு (FDI) அரசாங்கம் திறந்துவிட்டதாகக் கூறினார்.

இந்த நடவடிக்கைகள், தூய்மையான மற்றும் திறமையான ஆற்றல் தீர்வுகளை நோக்கி இந்தியா முன்னோக்கி செல்ல உதவும் என்றார்.

பொருளாதாரக் கொள்கைகளை எளிமைப்படுத்தவும், நெறிப்படுத்தவும் அரசு எடுத்து வரும் முயற்சிகள் குறித்து பிரதமர் மோடி மேலும் விளக்கினார்.

வர்த்தகத்தை எளிதாக்கும் வகையில் சுங்க விகிதக் கட்டமைப்பு பகுத்தறிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் புதிய, எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரிக் குறியீடு அறிமுகப்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நம்பிக்கை அடிப்படையிலான பொருளாதார நிர்வாகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒழுங்குமுறை சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழுவை நிறுவுவதைக் குறிப்பிட்டு, தொடர்ச்சியான சீர்திருத்தங்களுக்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

அரசாங்கத்தின் வணிக சார்பு நிலைப்பாட்டை எடுத்துரைத்த பிரதமர் மோடி, அண்மைய ஆண்டுகளில் 40,000 க்கும் மேற்பட்ட இணக்கங்கள் பகுத்தறிவு செய்யப்பட்டு இந்தியாவை மிகவும் வணிக நட்பு நாடாக மாற்றியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

தேசிய உற்பத்தி இயக்கம் அமைப்பது உட்பட இந்தியா எடுத்துள்ள முயற்சிகளை ஆய்வு செய்யுமாறும் பிரதமர் மன்றத்தை வலியுறுத்தினார்.

இந்தியாவில் கிடைக்கும் பரந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி, தொழில்நுட்பம், புதுமை மற்றும் நிலையான வளர்ச்சி போன்ற துறைகளில் ஒத்துழைக்குமாறு அவர் பிரெஞ்சு நிறுவனங்களை வலியுறுத்தினார்.

பிரதமர் மோடி தற்போது பெப்ரவரி 10 முதல் 12 வரை பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

செவ்வாயன்று பாரிஸில் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடன் AI அதிரடி உச்சி மாநாட்டிற்கு அவர் தலைமை தாங்கினார்.

இதைத் தொடர்ந்து, பெப்ரவரி 12-13 ஆம் திகதிகளில் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த தலைவர்களை சந்தித்துப் பேசவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Image

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *