கட்சியை காப்பாற்ற மும்மூர்த்திகள் பதவி விலக வேண்டும்

தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் விழலுக்கு இறைத்த நீராக தம் இனத்தையே அழிக்கும் கோடலி காம்பின் கையில் கிடைத்துள்ளது. தமிழரசுக் கட்சி செயற்பட வேண்டுமாக இருந்தால் பதில் மும்மூர்த்திகளும் பதவி விலக வேண்டும் என தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மத்திய குழு உறுப்பினரும், முல்லைத்தீவு கிளைத் தலைவருமான சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில்  இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களுக்கு எனது அஞ்சலிகளை தெரிவித்துக் கொண்டு சில விடயங்களை தெரிவிக்க வேண்டியுள்ளது.

இன்று அநுர கட்சி வடமாகாணத்தில் ஊடுருவல் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எமது இனத்தின் போராட்டத்தை இனவாதமாக தென்னிலங்கையில் காட்டி அவர்களது உறுப்பினர்களை ஆயுதப் படையில் சேர்த்து எமது போராட்டத்தை முறியடிப்பதறகு முன் நின்றார்கள்.

அதுமட்டுமல்ல 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் ஒன்றாக இணைக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணங்களை பிரிக்க வழக்கு தாக்கல் செய்தார்கள். இன்று அவர்கள் எமது தேசமெங்கும் வந்து தேசிய வீரர்கள் போல் தமது செயறபாடுகளை செய்து வருகிறார்கள். இதற்கு இடம்விட்டு கொடுத்தது யார்? தமிழர்கள் தமிழர்களாலேயே அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டது தான் அவர்களுக்கு இடம் கிடைத்தது.

ஈழ விடுதலை போராட்டத்தை திசை மாற்றிய கூட்டம் தம் இனத்தையே வெட்டி வீழ்த்தும் கோடாலி காம்புகாளாக தமிழரசுக் கட்சியை ஆக்கிரமித்து தவறான பாதையில் கொண்டு செல்ல முயல்கிறார்கள். எனவே, அதில் இருந்து தமிழரசுக் கட்சியை மீட்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். மாவை சேனாதிராஜா அவர்களைப் பொறுத்தவரை அவர் 7 வருடங்கள் சிறையில் இருந்தவர். 7 வருடங்கள் என்றால் 2,500 நாட்கள், 60 ஆயிரம் மணித்தியாலங்கள் சிறையில் இருந்துள்ளார். சிறைச்சாலை பற்றி உங்களுக்கு தெரியும்.

இவ்வாறு பல கஸ்ரங்களுக்கு மத்தியில் சிறையில் இருந்த மாவை சேனாதிராஜா அவர்களின் கால் தூசில் கூட இவர்களால் பிழை கண்டு பிடிக்க முடியாது. சிறையில் இருந்த காலத்தில் கூட உள ரீதியாக மக்களின் விடுதலைக்காக இருக்கின்றேன் என்ற எண்ணத்தில் இருந்தார். பலமான உள்ள எண்ணங்களுடன் இருந்த அவர் இறுதிக் காலத்தில் சூழ்ச்சி கூட்டத்தால் வீழ்த்தப்பட்டுள்ளார் என்பது தான் உண்மை.

எனக்கு தெரிந்த தகவலின்படி வைத்தியசாலைக்கு செல்லுமுன் மாலை அல்லது மதிய நேரம் இருவர் சென்றுள்ளனர். பதில் செயலாளர் சத்தியலிங்கம், பதில் தலைவர் சிவஞானம் ஆகியோரே சென்றுள்ளனர். அவர்கள் இருவரும் அவரை நேரடியாக சந்தித்துள்ளார்கள். அவர்கள் சந்தித்த போது அவரது குடும்பத்தில் முக்கியமான எவரும் இருக்கவில்லை அவர்கள் இருவரும் சந்தித்து வெளியேறிய பின் எனது நெருங்கிய நண்பர் கனடாவில் இருந்து வந்த சூரி சந்தித்துள்ளார்.

என்ன கதைத்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. எப்படியான அழுத்தங்களை கொடுத்தர்கள் என்பதும் தெரியாது. அதைச் சொல்ல மாவை சேனாதிராஜா இன்று இல்லை. எனவே அவர்கள் தான் இதனை வெளிப்படுத்த வேண்டும். அதுவரை வழமை போல் இருந்த அவர் அவர்கள் சந்தித்த பின் தான் வழமைக்கு மாறாக செயற்பட்டு இந்த நிலை வந்தது. வழக்கு தாக்கல் கோவைகள் எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அதிகாலையில் மூளை நரம்பு வெடித்ததால் இந்த நிலை ஏற்பட்டது. நான் சொல்வது தவறாக இருந்தால் பகிரங்க மன்னிப்பு கேட்க தயாராக இருக்கின்றேன். அந்த இருவரும் ஏன் சென்றீர்கள் என்ன கதைத்தீர்கள் என்பதை வெளிப்படுத்த தயாராக இருக்க வேண்டும்.

தேசியப் பட்டியல் மாவை சேனாதிராஜா அவர்களுக்கு கொடுத்திருக்கப்பட வேண்டும். கொடுத்திருந்தால் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து தலைவர் விட்ட பாதையில் ஒரு தமிழர் அணியை செயற்படுத்தி இருப்பார். அது தான் அவரது நோக்கமாகவும் இருந்தது. யாரையும் கட்சியை விட்டு கலைக்கும் எண்ணம் அவரிடம் இல்லை. போனவர்களையும் மீள இணைத்து தேசிய அமைப்பாக தமிழர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

ஆனால் அவரது முயற்சி துரோகத்தால் தோற்கடிக்கப்பட்டது. பண்டார வன்னியன் காக்கை வன்னியனால தோற்கடிக்கப்பட்டது போல் மாவை சேனாதிராஜா நவீன காக்கை வன்னியர்களால் தோற்கடிக்கப்பட்டார் என்பது தான் உண்மை.

வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது தேசியப் பட்டியல் இணைக்கபட வேண்டும். அது தவறினால் தேசியப் பட்டியல் நேரடியாக தேர்தல் திணைக்களத்திற்கு வழங்க வேண்டும். இது இரண்டும் செய்யப்படவில்லை அது ஈமொயில் அனுப்பப்ட்டதாக கல்வி மான்களும், அதற்கு பொறுப்பானவர்களும் சொல்கிறார்கள். பட்டியல் அனுப்பியிருந்தால் முதலாவது பெயராக மாவை சேனாதிராஜா அவர்களின் பெயர் இருந்தது. தாங்கள் தோற்று விட்டால் அதனை தாங்கள் எடுப்பதற்காக சூழ்ச்சி செய்துள்ளார்கள். இந்த பற்றிய நடைமுறைகள் அவர்களுக்கு தெரியாதா.

இது திட்டமட்டு செய்யப்பட்ட சதி. அந்த சதி மூலம் அந்த தேசியப் பட்டியலை தாங்கள் எடுத்துள்ளார்கள். தேசிய பட்டியல் விழலுக்கு இறைத்த நீராக தம் இனத்தையே அழிக்கும் கோடலி காம்பின் கையில் கிடைத்துள்ளது. வன்னியில் மூன்று மாவட்டங்கள் உள்ளது. வவுனியாவில் நேரடியாக தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருக்கு கிடைத்த வாக்கு 406. ஒரு கிராம சேவையாளர் பிரிவுக்கு ஒன்று கூட விழவில்லை. அப்படியான ஒருவர் தான் தேசியப்பட்டியல் எடுத்துள்ளார். இது ஒரு சூழ்ச்சி. யாருடைய வழிகாட்டலில் இதை எடுத்துள்ளார்கள என அறிய வேண்டும். இந்த நிகழ்ச்சி நிரலின் பின் யார் இருக்கிறார்கள் என்பது தெரியாது.

தமிழரசுக் கட்சியை மீட்டு எடுக்க வேண்டுமாக இருந்தால் பதில், பதில், பதில் என்கின்ற மும்மூர்த்திகள் தங்களது பதவிளை விட்டு பதவி விலக வேண்டும். தமிழரசுக் கட்சியை சுமுகமாக இயங்க வழி விடவேண்டும். பொதுக் குழுவை தடை செய்த வழக்கை பின்வாங்கிக் கொள்ள வேண்டும். கூட்டத்தில் வாக்குறுதி வழங்கியது போன்று நிபந்தனையின்றி வழக்கை மீளப் பெற வேண்டும். இன்று நிபந்தனகளை வைத்துள்ளார்கள். தமிழரசுக கட்சியை மீடடெக்க உதவ வேண்டும் என்பது தான் என்னுடைய அவா. அதுவே மாவை சேனாதிராஜா அவர்களின் ஆத்ம சாந்தியடைய வழிவகுக்கும். அல்லது தமிழரசுக்கட்சி உருக்குலைந்து விடும் என்பதே எங்களது ஆதங்கம் எனத் தெரிவித்தார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button