கருணா அம்மான் கட்சிக்குள் உடைவு; கட்சியிலிருந்து வெளியேறினார் ஜெயா சரவணா

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சி ஊழல் நிறைந்தது என கட்சியிலிருந்து வெளியேறிய தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் முன்னாள் உப தலைவரும், அம்மான் படையணியின் தலைவருமான ஜெயா சரவணா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அரசியல் பயணத்தில் முக்கியமான ஒரு முடிவை அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளேன்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவர் பதவியில் இருந்தும் அக்கட்சியின் அடிப்படை உரிமை பதவியில் இருந்தும் கடந்த 17.08.2024 அன்று விடுவித்து கொண்டுள்ளேன்.

அக்கட்சியில் நீண்ட தூரம் என்னால் பயணிக்க முடியாது என்பதனை புரிந்து கொண்டேன்.

போரினால் பாதிக்கப்பட்டு தமது அன்றாட வாழ்க்கைக்கு மற்றையவர்களிடம் கையேந்தும் நிலமைக்கு தள்ளப்பட்டிருக்கும் தமிழ் மக்களின் பொருளாதாரம், மேம்பாடு அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது என்பவற்றை கருத்தில் கொண்டு ஆரம்பித்த பயணம் இன்று பல கோடிக்கணக்கான பணத்தை இழந்து நிற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

அங்கே நிதி மோசடிகளும், ஊழல்களும் வீண்விரயங்களும் செய்யப்பட்டு நிதிகள் இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளது.

ஊழல் நிறைந்த அக்கட்சியில் இருந்து என்னால்பயணத்தை தொடர முடியாது இருப்பதாலேயே இம் முடிவு எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம்.

நிதிமோசடிக்கு அந்த கட்சியின் தலைவர் கருணா அம்மான் அவர்களும் அவரினை சுற்றியிருக்கும் சமூகவிரோத கும்பல்களும் முழுப்பொறுப்பு கூறவேண்டும் .

ஒரு கட்சியினை எப்படி வழிநடத்த வேண்டும் என தெரியாமல் மிலேச்சத்தனமான போக்கில் செயற்பட்டு கொண்டிருக்கும்போது ஜனநாயக பாதையில் மக்களின் தேவையை, மக்களின் அன்றாட வாழ்கைக்கு எப்படி உதவுவது என்பதனை புரிந்து கொள்ள தெரியாத நிலையில் ஒருவட்டத்திற்குள் என்னால் செயற்படமுடியாது.

எனக்கு பலபக்கங்களிலும் இருந்து நிறைய அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

இருப்பினும் எனது மக்கள் சேவை அன்பின் இல்லம் அறக்கட்டளை சேவை மூலமும், என்னால் ஆரம்பிக்கப்பட்ட அம்மான் படையணி மூலமும் தொடரும்.

இதுரை நான் எவரிடமும் எனது அன்பின் இல்லத்திற்கோ, அம்மான் படையணிக்கோ ஒரு சதம் கூட கேட்கவும் இல்லை, பெறவும் இல்லை.

முழுநிதியும் என்னுடைய சொந்த உழைப்பில் எனது கையால் செலவிடப்பட்டது. இருப்பினும் எனது பயணத்தினை இடைநிறுத்தி கொள்வேன் என யாரும் கனவு காணவேண்டாம்.

இழப்புகள் என்பது எனக்கு புதிதல்ல, பல துரோகங்களை நான் சந்தித்திருக்கின்றேன். இன்றும் பாரிய துரோகம் முதுகில் குத்தும் செயலை சந்தித்திருக்கின்றேன். செய்தவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல.

என்து அன்பின் இல்லம் அறக்கட்டளை, அம்மான் படையணியுடன் இணைந்து இன்றில் இருந்து எனது சேவையை ஆரம்பிக்கும் . குறிப்பாக வடக்கு கிழக்கில் அது தொடர்ந்த வண்ணமே இருக்கும் என்பதை உறுதிபட கூறுகின்றேன்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எனது இரு அமைப்புக்களும் அதனை சார்ந்த மக்களும் எமது தமிழர் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக சமூதாயத்துடன் இணைந்து ஓட வேண்டும்.

மற்றையபடி விருப்பு வாக்கின்படி ஒரு புதிய ஜனாதிபதியை தெரிவு செய்தால் நன்றாக இருக்கும்.

அதேநேரம் எமது தமிழ் இருப்பை ஒற்றுமையாக காட்டவேண்டும் என்பதற்காக தமிழ் மக்களுடன் சமுதாயத்துடன் இணைந்து பயணிக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button