முச்சந்தி

சஜித் தலைமையில் புதிய கூட்டணி: பாட்டலி சம்பிக்க ரணவக்கவுடனும் கலந்துரையாடல்

ஐக்கிய மக்கள் சக்தியுடன் தற்போது இணைந்துள்ள அரசியல் கட்சிகள், அரசாங்கத்திலிருந்து பிரிந்த சுயாதீன குழுக்கள் , சிவில் வர்த்தகர்கள் உள்ளிட்ட ஏராளமான எண்ணிக்கையிலானோர், இன்று (08) சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியுடன் இணையவுள்ளதாகவும் இதுவரையில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய கூட்டணியாக இருக்கும் எனவும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைத்துக் கொள்ளும் நோக்கில் தற்போது நாடாளுமன்றத்தை பிரநிதித்துவப்படுத்தும் இரு சுயாதீன குழுக்களுடன் தற்போது கலந்துரையாடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கட்சியை ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைத்துக் கொள்ள கலந்துரையாடி வருவதாக அக்கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுதந்திர மக்கள் சபையை பிரநிதித்துவப்படுத்தும் டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட குழு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தயாசிறி ஜயசேகர குழுவினர் மலையக மக்கள் முன்னணி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணியுடன் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவும் சஜித்துக்கு வழங்கப்படும் என அதன் தலைவர் , நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவை அறிவிப்பது தாமதமாகும் என அக்கட்சியின் தலைவர் ரிஷாட் பதுர்தீன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button