உலகம்

பொருளாதாரம் – தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: பிரித்தானிய அரசின் புதிய சட்டங்கள்

பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இலக்கு நிர்ணயித்து 37 புதிய சட்ட முன்மொழிவுகளை உள்ளடக்கிய மன்னர் உரை வெளியிட்டுள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தொழிலாளர் கட்சி பின்னடைவைச் சந்தித்த நிலையில், தனது அதிகாரத்தை நிலைநாட்டும் ஒரு முயற்சியாகப் பிரதமரால் இந்த அதிரடித் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் தொடர்புகளை மேம்படுத்த புதிய ஐரோப்பிய கூட்டாண்மைச் சட்டம் கொண்டுவரப்பட உள்ளது.
இதன் மூலம் உணவு, பானங்கள் மற்றும் எரிசக்தித் துறைகளில் ஐரோப்பிய நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள அரசுக்குக் கூடுதல் அதிகாரங்கள் கிடைக்கும்.
அரசின் புதிய கொள்கையின்படி, சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் சார்ந்த ஒழுங்குமுறை அமைப்புகள் இனி பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீடுகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது செயற்கை நுண்ணறிவு மற்றும் மருத்துவத் துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளை விரைவாகச் சந்தைக்குக் கொண்டு வர உதவும். அதேபோல், வெளிநாடுகளின் உளவு வேலைகள் மற்றும் சீர்குலைப்பு நடவடிக்கைகளைத் தடுக்கக் கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
இதன்மூலம் விரோத நாடுகளின் சார்பாகச் செயல்படும் குழுக்களுக்குத் தடை விதிக்கவும், சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்யவும் காவல்துறைக்கு அதிக அதிகாரம் வழங்கப்படும்.
ஜனநாயக ரீதியான மாற்றங்களாக, பிரித்தானியாவில் வாக்களிக்கும் வயது 18 இல் இருந்து 16 ஆகக் குறைக்கப்பட உள்ளது. இது இளைஞர்களின் அரசியல் பங்கேற்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், குற்றச்சாட்டுகளில் சிக்கிய பிரபுக்கள் சபையின் உறுப்பினர்களிடமிருந்து கௌரவப் பட்டங்களைப் பறிக்கப் புதிய சட்டம் வழிவகை செய்கிறது.
எரிசக்தித் துறையைப் பொறுத்தவரை, அணுசக்தி பயன்பாட்டை விரிவுபடுத்தவும், காற்றாலை மற்றும் ஹைட்ரஜன் போன்ற தூய்மையான எரிசக்தித் திட்டங்களை வேகப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.
தஞ்சம் கோருபவர்களின் மேல்முறையீட்டு முறையை மாற்றியமைத்து அகதிகள் தொடர்பான சட்டங்களைக் கடுமையாக்கவும் மன்னர் உரையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய சட்டங்கள் அனைத்தும் வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button