கட்டுரைகள்

பிரதமர் மோடியின் சர்ச்சையை கிளப்பிய பேச்சு: இரண்டாம் கட்ட தேர்தலில் தீவிரமாகும் பிரச்சாரம்!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா.

( இதுவரை கண்டிராத, காண சகிக்க முடியாத காட்சிகள் எல்லாம் இந்திய
தேர்தலில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. முதல்கட்ட தேர்தலில் பல கட்சிகள் தமக்கு சாதகமான சூழல் இல்லாததை,
தற்போது நடக்கும் பிரச்சாரத்தில் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பல நடவடிக்கைகளை அமைத்துக் கொண்டுள்ளனர்)
இந்தியாவில் 102 தொகுதிகளில் நடந்து முடிந்த முதல் கட்ட தேர்தலையடுத்து இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்தியா உலகில் உள்ள மக்களாட்சி நாடுகளில் அதிக மக்கள் தொகை கொண்டதாகும். இந்த ஆண்டு கணக்கின்படி 96.4 கோடி பேர் இந்தியாவில் வாக்குரிமை பெற்றிருந்தனர்.
மதவிரோத பிரச்சாரம்:
இந்திய நாட்டின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழா என்று சொல்லிக் கொள்ளும் இந்த தேர்தலில் இதுவரை கண்டிராத, காண சகிக்க முடியாத காட்சிகள் எல்லாம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
முதல்கட்ட தேர்தலில் பல கட்சிகள் தமக்கு சாதகமான சூழல் இல்லாததை,
தற்போது நடக்கும் பிரச்சாரத்தில் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பல நடவடிக்கைகளை அமைத்துக் கொண்டுள்ளனர்.
தெலுங்கானாவில் உள்ள கிறிஸ்தவ பள்ளி மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் அந்த பள்ளியை அடித்து நொறுக்கி உள்ளனர்.
அதே வேளை ஹைதராபாத்தில் மக்களவை பாஜக வேட்பாளர் மசூதியை நோக்கி அம்பு எய்வது போல் சைகை செய்தது என்பதெல்லாம் பல சான்றுகள் உள்ளன.
மோடியின் சர்ச்சையான பேச்சு:
ராஜஸ்தானில் நடைபெற்ற பிரச்சார பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி, ஆற்றிய உரை பலத்த சர்ச்சையை உருவாக்கி உள்ளது. கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி ராஜஸ்தான் பன்ஸ்வாரா பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்களின் செல்வங்களை எல்லாம் ஊடுருவியர்களுக்கும், அதிக குழந்தை பெற்றெடுத்தவர்களுக்கும் கொடுத்து விடுவார்கள்.
இதற்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நாட்டின் வளங்களை பயன்படுத்துவதற்கு இஸ்லாமியர்களுக்கு தான் முன்னுரிமை என்று மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் பெண்களின் நகைகள் கணக்கீடு செய்யப்பட்டு அது பகிர்ந்து அளிக்கப்படும் என்று உள்ளது. நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து யாருக்கு தரப் போகிறீர்கள்? ஊடுருவியவர்களுக்கா?” என்று மோடி கூறிய கருத்தை பல கட்சிகளும் கண்டித்துள்ளன.
திமுக – காங்கிரஸ் கடும் கண்டனம்:
மோடியின் இந்த சர்ச்சையான பிரச்சாரத்திற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்தன. எதிர்க்கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மு.க.ஸ்டாலின் என பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
குறிப்பாக பாஜகவின் கூட்டாளியாக இருந்த அகாலி தள் கூட எதிர்ப்பை பதிவு செய்து இருக்கிறது. மோடியின் இந்த பேச்சுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிக்காக, வேறு வழியின்றி மத உணர்வுகளை தூண்டிவிட்டு அதன் மூலம் ஆதாயம் பெறும் அளவுக்கு கீழே இறங்கிவிட்டார் மோடி என எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்து உள்ளனர்.
மேலும், இதுதொடர்பாக காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகாரும் அளித்துள்ளன.
இருந்த போதிலும், பிரதமர் நரேந்திர மோடி தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை. “நான் உண்மையை பேசியதால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொந்தளிக்கின்றன. காங்கிரஸ் கூறியதை தானே நான் கூறினேன்.
உண்மை வெளிவந்து விட்டதே என்று அவர்கள் பதற்றம் அடைந்து விட்டார்களோ? உண்மையை கண்டு ஏன் பயப்படுகிறீர்கள்?” என மோடி கேள்வியெழுப்பி இருந்தார்.
பாஜக சிறுபான்மை அணி தலைவர் நீக்கம்:
இது ஒருபுறம் இருக்க, மோடியின் இந்த பேச்சுக்கு ஜெய்ப்பூர் பாஜக சிறுபான்மை அணித் தலைவர் உஸ்மான் கனி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். பிரதமர் நரேந்திர மோடியின் சர்ச்சையான பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த, பாஜக சிறுபான்மை அணி தலைவர் உஸ்மான் கனி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக சிறுபான்மை அணி தலைவர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டதை பலரும் விமர்சித்துள்ளனர்.
மேலும், மோடியின் பேச்சு காரணமாக ராஜஸ்தானில் 3 முதல் 4 இடங்கள் வரை இழங்கக் கூடும் எனவும் அவர் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், பிரச்சாரத்திற்கு செல்லும் போது மோடியின் இந்த பேச்சு குறித்து இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் இந்துக்களே கூட கேள்வி எழுப்புகிறார்கள் என உஸ்மான் கனி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உஸ்மான் கனியின் இந்த பேச்சு, பிரதமர் மோடிக்கும், பாஜக தலைமைக்கும் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, உஸ்மான் கனியை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்க பாஜக தலைமை உத்தரவிட்டது.
மேலும் இரண்டு சிவில் உரிமை குழுக்கள் மோடியின் பேச்சை கண்டித்து அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி 17,000 பேர் கையெழுத்திட்ட கடிதத்தை தேர்தல் ஆணையத்திடம் அனுப்பியிருக்கிறது.
அந்த கடிதத்தில் “இது அபாயமானது மற்றும் முஸ்லிம்கள் மீது இது நேரடி தாக்குதல்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை ஏப்ரல் 22-ஆம் தேதி காங்கிரஸ், சிபிஎம் கட்சிகள் மோடி மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தன. காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்கவி, “தேர்தல் ஆணையம் விசாரணையில் இருக்கிறது, ஒட்டுமொத்த நாடும் மோடிக்கு எதிரான நடவடிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கிறது” என்று கூறினார்.
ஆனால், மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என்று எதிர்கட்சிகள் வேண்டினாலும், தேர்தல் ஆணையமோ மோடியின் வெறுப்பு பேச்சுக்கு கருத்து கூற இயலாது என்று இடித்துரைத்திருக்கிறது.
ஆனால், இந்தியா கூட்டணியைச் சேர்ந்த சிவசேனா உத்தவ் தாக்கரே கட்சியின் தேர்தல் சின்னத்தினை பிரபலபடுத்த வெளியிட்ட பாடலில் இருந்து “ஜெய் பவானி” “இந்து” போன்ற வார்த்தைகளை நீக்க கோரியதும் இதே தேர்தல் ஆணையம் தான்.
எனவே, இனிவரும் நாட்களில் இத் தேர்தலில் மத வெறுப்பு பேச்சுக்கள் அதிகரிக்கவே செய்யும் போல தெரிகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.