இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு : ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சர் அதிரடியாக கைது
ரஷ்யாவின் பிரதி பாதுகாப்பு அமைச்சரை கைது செய்து தடுத்து வைக்க அந்நாட்டு நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.
பிரதி அமைச்சர் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
இவர் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவுக்கு நெருக்கமானவராக கருதப்படுகிறார்.
ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு பதிவாகிய மிகப்பெரிய ஊழல்
பெப்ரவரி 2022 இல் உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு பதிவாகிய மிகப்பெரிய ஊழல் வழக்கு திமூர் இவானோஃப் மீதான குற்றச்சாட்டுகள் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
பிரதியமைச்சர் நேற்று தனது அலுவலக கடமைகளில் ஈடுபட்டிருந்த போதே ரஷ்ய மத்திய பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் பெரும் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.
15 வருட சிறைத்தண்டனை
பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் இலஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், அந்தக் குற்றச்சாட்டுகளுக்காக அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 15 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.