அவுஸ்திரேலியா, கனடாவை அடுத்து விசா கட்டுப்பாடுகளை அறிவித்த நாடு!

அவுஸ்திரேலியா, கனடா நாடுகளை அடுத்து நியூசிலாந்தும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கடுமையான விசா விதிகளை அறிவித்துள்ளது. முதற்கட்டமாக நாட்டில் வேலைகளுக்குத் தகுதி பெறுவதற்கான தேவைகளை அதிகரித்துள்ளது. இதனால் நியூசிலாந்தில் வேலை தேடும் இந்தியர்கள் உட்பட ஆசிய நாட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றே நம்பப்படுகிறது.

பணி அனுமதிப்பத்திரத்துடன் தங்கியிருக்கும் கால அளவைக் குறைத்துள்ளதை தவிர்த்து, ஆங்கிலப் புலமை, பணி அனுபவம் உள்ளிட்டவையும் புதிய தேவைகளில் அடங்கும்.

குடியேற்ற முறையை மாற்றியமைப்பதன் மூலம், நாட்டிற்குள் நுழையும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியும் என்று நியூசிலாந்து அரசாங்கம் நம்புகிறது.

நியூசிலாந்து அரசாங்கத்தின் இந்த புதிய முடிவால், இந்தியர்கள் மற்றும் பிற ஆசிய நாட்டவர்களுக்கு வேலை கிடைப்பது கடினமாக இருக்கலாம் என நிபுணர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

நியூசிலாந்தில் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2018 நியூசிலாந்து மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியர்கள் மக்கள் தொகையில் 4.7 சதவிகிதமாக உள்ளனர்.

அக்டோபர் 2023ல் வெளியான தரவுகளின் அடிப்படையில், நியூசிலாந்தில் சுமார் 2,50,000 இந்திய வம்சாவளியினர் மற்றும் குடியேறியவர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011 முதல் சுமார் 18,000 இந்தியர்கள் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்துள்ளனர். புதிய விசா விதிகள் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், உள்ளூர் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பை வழங்குவதையும், அவர்களை நாட்டில் தங்குவதற்கு ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

2023ல் மட்டும், சிறந்த வேலை வாய்ப்புகளுக்காக வேறு நாடுகளுக்கு 47,000 நியூசிலாந்து குடிமக்கள் குடிபெயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *