கட்டுரைகள்

ஆரம்பம் முடிவை நோக்கி! முடிவிலிருந்து ஆரம்பம்!!……8……சங்கர சுப்பிரமணியன்.

 முதலாளியாக இருந்தவனிடம் பிழைப்புக்காக வேலைதேடி வந்தவனே முதலாளியாகி விட்டால் எப்படியிருக்கும்? அந்த நிலைதான் உருவாகியுள்ளது. அந்த நிலையிலும் அந்த முதலாளியிடமே கூனிக்குறுகி வேலைகேட்கும் நிலைக்கு நம்மை தள்ளியவர்கள் யார்?
வேற்றின முதலாளியாவது நமக்கு வேலை தருகின்றானா என்றால் அதவும் இல்லை. வாழவைக்கப்பட்டவனோ சரியாகவே வாழக்கற்றுக் கொண்டான். எப்படி என்கிறீர்களா? வாழவைத்தவர்களை
வேலைக்கு வைத்துவிடக்கூடாது என்பதில் மிகவும் தெளிவாகவே இருக்கிறான். எப்படிப்பட்ட தெளிவு தெரியுமா?
வந்தவன் தமது நிறுவனங்களில் இங்குள்ளவர்களுக்கு வேலை கொடுப்பது இல்லை. பெருநகரங்களில் உள்ள பல நிறுவனங்களில் வந்தவர்களின் இனத்தினரேயே அதிக அளவில் பணிக்கு அமர்த்துகிறார்கள். கண் துடைப்புக்காக தமிழர் அங்கே ஓரிருவர் இருப்பர். நான் சொல்வதெல்லாம் உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
ஒப்பிடுகையில் தமிழரில் குறைவாகவே இருக்கும் தமிழர் நிறுவனங்களும் கூட தமிழரை அதிக அளவில் பணியில் பணியில் அமர்த்துவதில்லை. ஒருவேளை அவர்களும் வந்தாரை வாழவைக்கிறார்களா? அல்லது
வேற்றினத்தவர்க்கு கூலி அதிகம் கொடுக்க தேவையில்லை என்று இந்த நிலைப்பாட்டை எடுக்கிறார்களா என்பது பதினெட்டாம்படி கருப்பசாமிக்கே வெளிச்சம்.
குறைந்த கூலிக்கு ஆள் கிடைக்கிறார்கள் என்பதற்காக வேற்றினத்தவர்க்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள். அவர்களை குறைகூற முடியாது. போத்திக் கொள்ள வந்தாரை வாழவைக்கிறோம் என்ற போர்வை அந்த வசதி வாய்ப்பை வழங்கியுள்ளது.
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானாக வளரும் என்ற சித்தாந்தத்தின் பின் செல்கிறார்கள். தம்பிள்ளை தானே எங்கு வளர்கிறது. அது பாட்டிலில் மதிமயங்கி இன்புற்று வாழ்கிறது. இந்த மதுவில் மயங்கிக் கிடக்கும் இழிநிலைக்கு நம்மை தள்ளியவர்கள் யார்?
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பதுபோல் எவ்வித ஆராய்ச்சியும் நமக்கு தேவையில்லை. நமக்குத்தான் குடிக்க மதுவும் பார்க்க திரைப்படங்களும் தலைவனாகப் போற்றித் தொழுது நம் வாழ்க்கையைப் பற்றி நினைக்காமலிருக்க திரைப்பட நாயகர்களும் நாயகிகளும் இருக்கிறார்களே?
தாய் தந்தையரை கலங்காது காப்பாற்ற வழிதெரியாது போனாலும் தலவனுக்கு போஸ்டர் ஒட்ட அரும்பணி கிடைத்ததே வாழ்நாளில் பெற்ற பேறல்லவா? இந்த இழிநிலைக்கு தமிழர்களைத் தள்ளியவன் யார்?
மதுவில் மக்களைத் தள்ளி குடிகாரர்களாக்கி
அவர்களை தம் குடும்பத்தை பற்றியோ எதிர்காலத்தைப் பற்றியோ எண்ணவிடாமல் மூளையை மழுங்கடித்து விட்டார்கள். மூளை மழுங்கியதால் கல்வியில் சிறந்து விளங்கிய தமிழன் கல்வியிலிருந்து அகற்றப்பட்டான். பணமிருப்பவர்களுக்கே கல்வி என்ற நிலையை உருவாக்கி கல்வியை வியாபாரம் ஆக்கிவிட்டான்.
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனினும் அரிது மது அருந்தி மதி இழப்பது அரிது. அதனினும் அரிது மொழிப்பற்றற்று இருத்தல் அரிது. மொழிப்பற்றற்று இருத்தலிலும்அரிது இனமழிந்து கொண்டிருந்தாலும் இன்புற்றிருத்தல் அரிது என்று வாழ்வதையே சிறப்பென வாழும் சிதையுண்ட மனிதரை சீர்திருத்த வருபவரே இனி சிறந்து நிற்க முடியும்.
தினமும் கூலி வேலைகளுக்கு செல்லும் மக்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைத்திருக்கிறதா? அவர்களுக்கென குறைந்த பட்சம் ஊதியம் கிடைக்கிறதா என்றால் திட்டவட்டமாகச் சொல்லலாம்.
இவர்களைக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் தரும் வகையில் அவர்களை பணியமர்த்தும் முதலாளிகள் நம்மினத்தில் இருக்கிறார்களா? அப்படியே இருந்தாலும் வேற்றினத்து முதலாளிகள் அவர்களது இனத்து மக்களை நடத்துவதுபோல் இவர்கள் நம்மக்கள் நடத்துகிறார்களா?
இல்லை இல்லை. அங்கே சாதி என்ற சனியன் குறுக்கே நம்மின முதலாளிகளின் கண்களை மூடி மறைக்கின்றன. ஒருவேளை கண்கள் அதிசயமாகத் திறந்தாலும் அது சுரண்டலுக்கு பயன்பட்டு ஏழைகளின் கூலியில் கைவைத்து அவர்களை ஒரு அடப்படை வசதியோடு கூட வாழ விடாமல் தடுக்கின்றன.
இந்த கொடுமை இவ்வாறிருக்க வேற்றின மக்களிடம் கூலி வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். நாம் தான் வந்தாரை வாழவைப்பவர்கள் ஆயிற்றே. அந்த பெருமை ஒன்றே போதாதா? அதனால் அவர்களிடம் கூலி வேலை பார்ப்பதும் நமக்கு பெருமைதான் இல்லையா?
தினமும் கூலி வேலைகளுக்கு செல்லும் மக்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைத்திருக்கிறதா? அவர்களுக்கென குறைந்த பட்சம் ஊதியம் கிடைக்கிறதா என்றால் திட்டவட்டமாகச் சொல்லலாம்.
-சங்கர சுப்பிரமணியன்.
(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *