கட்டுரைகள்

ஆரம்பம் முடிவை நோக்கி! முடிவுலிருந்து ஆரம்பம்!!….6….. சங்கர சுப்பிரமணியன்.

ஒருபக்கம் நம் இனத்தின் பலம் பலவீனப் படுத்தப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் திட்டமிட்டு திரைப்படம் மது போன்றவற்றால் சிந்திக்கும் திறன் மழுங்கடிக்கப் பட்டுள்ளது.இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் நம்மில் வேறுபாட்டினை விரிவு படுத்திக் கொண்டே போனால் தமிழர் என்பதால் இயற்கை தன் கடமையை ஆற்றாது கண்மூடிக் கிடக்காது.நம்மினம் ஒவ்வொரு நிலப்பரப்பிலுருந்தும் விரட்டப்படும்.வேலைவாய்ப்பு, நிம்மதியாயான வாழ்வு, மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் என அண்டை மாநிலங்களிலும் அயல்நாடுகளிலும் என உலகம் பூராவும் குடியேறும் நிலை ஏற்படும்.கண் கெட்டபின் சூரிய வணக்கம் என்பதைப்போல நாமும் நமக்கென ஒரு நாடில்லையே என்று வருந்தும் நிலைஏற்படலாம். அப்போது நமக்கு மொழி, இனம், மண் மற்றும் ஒற்றுமையின் அவசியம் புரியவரும்.உலகம் முழுதும் பரந்து கிடக்கும் தமிழர் கல்வி, பொருளாதாரம் மற்றும் ஒற்றுமையின் அவசியத்தை உணரும் காலம் உருவாகலாம்.எல்லா வகையிலும் வல்லமை படைத்து அதன்பின் தமக்ககென ஒரு நாட்டை உருவாக்கலாம்.இப்போதுதான் நாம் ஆரம்பத்திலிருந்து முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோமா என்பதையும் அல்ல நாம் முடிவுக்கு வந்து ஆரம்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோமா என்பதை முடிவு செய்யவேண்டும்.எனவே மொழி அழிகிறது என்று ஓலமிடுவதைக் கைவிட்டு ஒற்றுமையுடன் இனத்தையும் மண்ணையும் காக்கும் வழியில் நம் கவனத்தை திருப்பவேண்டும். மண்ணையும் இனத்தையும் காக்க அதிகாரம் ஒன்றால்தான் முடியும்.ஏனென்றால் மொழி என்ற காரட்டைக் காட்டித்தான் வேற்றினத்தவர் நம்மை குதிரையாக்கி நம்மேல் சவாரி செய்து கொண்டிருக்கிறார்கள். நமக்கு நாம் குதிரை என்றும் தெரியவில்லை நம்மீது காரட்டை காட்டி ஏமாற்றுபவர்களையும் பற்றியும் தெரிவதில்லை. காரட்டு மட்டுமே கண்ணில் தெரிகிறது. இவ்வளவு தூரம் பயணம் செய்தும் காரட் வாய்க்கு கிட்டவில்லையே என்ற பொது அறிவும் அற்று வாழ்கிறோம்.நான் இப்படி சொல்வதால் சிலர் வருந்தலாம். வழக்காடு மொழியாக தமிழ் இருக்கிறதா? பாண்டிய அரசன் அரண்மனையில் அன்று தமிழில்தானே வழக்காடினாள் கண்ணகி. ஆனால் இன்று மதுரை உயர்நீதி மன்றத்தில் தமிழில் வாதாட முடிகிறதா?திருக்குறள் என்ன சாதாரண நாவலா? அது ஒரு நீதி நூல். முற்றத்து முல்லைக்கு மனமில்ல என்றொரு மலையாள பழமொழி உண்டு. கிட்டத்தட்ட கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற பழமொழியை ஒத்தது.என்ன இவன் என்ன புதிதாக கதைக்கிறானே என்று உங்களை கிள்ளிப் பார்க்காதீர்கள்.உலகின் பொதுமறையாக உலகமே நீதி நூலாக கொண்டாடும் திருக்குறள் உலகில் ஏதாவதொரு நாட்டில் சாட்சி நூலாக நீதிமன்றத்தில் இருக்கிறதா? அதுபோகட்டும் இந்திய நாட்டின் உச்சநீதி மன்றத்திலாவது திருக்குறள் மற்ற மத நூல்களுக்கு இணையாக சாட்சி நூலாக உள்ளதா? என்று பலநாட்கள் என்னுள் நான் எண்ணியதுண்டு.இந்தியா பல மாநிலங்களைக் கொண்டது. பல தேசிய இனமக்களைக் கொண்டது. அதனால் ஒரு மாநிலத்திலுள்ள ஒரு இனத்தவரின் மொழியிலுள்ள சிறந்த நூலை உச்சநீதி மன்றத்தில் சாட்சி நூலாக வைப்பதில் தயக்கம் காட்டலாம்.ஆனால் தமிழ்நாட்டில் தமிழ்நாட்டின் தலைநகரில் உள்ள உயர்நீதிமன்றத்திலாவது திருக்குறளை சாட்சி நூலாக வைத்திருக்கலாம் அல்லவா? தமிழருக்காகவும் தமிழுக்காகவும் போராடுவதாக சொல்லும் அரசு கூட அதை கொஞ்சம்கூட நினைத்துப் பார்ப்பதாக தெரியவில்லயே?நீதியை நிலைநாட்ட மதுரையில் போராடிய கண்ணகிக்கு சென்னையில் சிலை வைத்தார்கள். ஆனால் அதே நீதியை நிலைநாட்ட இப்போது உயர்நீதி மன்றத்தின் கிளையாக செயல்படும் மதுரை உயர்நீதி மன்றத்தில்கூட நீதிநூலான திருக்குறள் சாட்சி நூலாக வைக்கப்படவில்லையே.எவ்விடத்திலோ எப்போதோநடந்த நிகழ்வுகள் சாட்சி நூல்களாக உலகெங்கும் இருக்கிறது. உலகெங்கும் கொண்டாடப்படும் திருக்குறள் அது தோன்றிய தமிழ்மண்ணிலாவது நீதிமன்றத்தில் சாட்சி நூல்களில் ஒன்றாக இல்லையே?இதெல்லாம் போகட்டும் தமிழை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் தமிழுக்காக என்ன செய்துள்ளார்கள்? அகரத்தை முன்னிறுத்தி தமிழ் மறைசெய்து தமிழரையும் தமிழ் மொழியையும் உலகறிய வைத்தான் வள்ளுவன். யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் எங்கும் காணோம் என்றான் பாரதி.

-சங்கர சுப்பிரமணியன்.(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *