ஆரம்பம் முடிவை நோக்கி! முடிவுலிருந்து ஆரம்பம்!!….சங்கர சுப்பிரமணியன்.

சக்கரம் சுழல்கிறது. சக்கரம் சழலும்போது
அடிபாகம் மேலே வரும். மேல்பாகம் அடியில் செல்லும். இது இயற்கையின் நியதி. அந்த சக்கரத்தில் ஒரு புள்ளி சிறிதாக இருந்தால் சக்கரம் சுழலும்போது கண்ணுக்கு தெரியாது. அதுவே பெரிதாக இருந்தால் சக்கரம் சுழலும்போது தெரியும்.
நான் இயந்திர வாகனங்களில் சுழலும்
சக்கரங்களைப் பற்றி இங்கு குறிப்பிடவில்லை. மிதமான வேகத்தில் ஓடுகின்ற வண்டிச் சக்கரத்தைப் பற்றியே சொல்கிறேன்.
இவ்வண்டிச் சக்கரத்தில் கடுகளவு ஒரு புள்ளி இருந்தால் கண்ணுக்கு புலப்படாது. அதுவே ஒரு எலுமவிச்சை பழ அளவு அடையாளமிருந்தால் எளிதாகத் தெரியும். இது வாழ்க்கைச் சக்கரத்துக்கும் பொருந்தும். வரலாற்று சக்கரத்துக்கும் பொருந்தும்.
ஏனென்றால் வாழ்க்கையோ வரலாறோ ராக்கெட் வேகத்தில் பயணிப்பதில்லை. புராணக்கதைகளில் மட்டுமே பல லட்சம் வருடங்களைக் கொண்ட யுகங்களாக சிறு குழந்தைகளிடம் நிலவில் பாட்டி வடை சுடுகிறாள் பார் என்று காட்டுவதைப்போல காட்டமுடியும்.
அக்குழந்தைகளுக்கும் அதற்குண்டான அறிவுக்கேற்ப பாட்டி வடை சுடுவது போல் தெரியும். நமக்கு கூட வானில் மேக மூட்டங்களக் காணும்போது நம் கற்பனைக்கேற்ப பல உருவங்களில் பல வகைகளில் தெரியும்.
அவையாவும் உண்மையல்ல. மாயை என்று தெரியும். அவை மேகம் கலையும்போது மறைவதும் புரியும். அதுபோல் குழந்தைகளுக்கும் அவர்கள் வளர்ந்தவுடன் புரிந்து விடும். பாட்டியும் அங்கில்லை அவள் வடையையும் சுடவில்லை என அறிவர்.
அதெல்லாம் நமக்கு உணவூட்டும் போது சிறுவயதில் கவனத்தை திசை திருப்புவதற்காக கூறப்பட்ட கதைகள் என்பது புரியும். ஆனால் பெரியவர்கள் ஆன பின்பும் சிறுவயதில் புகுத்திய கருத்துக்களை ஏற்றுக் கொண்டு ஆம் பாட்டி வடைதான் சுடுகிறாள் என்று நம்புவர்களை குறைகூறுவதில் எப்பயனும் இல்லை.
நமது வாழ்வும் ஒரு மண்ணில் வேற்றினக் குடியேறல், இனக்கலப்பு, உயர்வு தாழ்வு, அடக்குமுறையால் அடிமைப்படல், அடிமைத்தளையில் இருந்து விடுபட போராடல், விடுதலை அடைதல் போன்றவை நடப்பதுண்டு.
விடுதலை என்பது என்ன? நம்மை அடிமைப் படுத்தி வைத்திருந்த ஒரு இனத்தின் பிடியிலிருந்து மொத்தமாக விலகுவதே விடுதலையாகும். விடுதலை என்ற பெயரில் ஒரு இனத்திடமிருந்து விலகி இன்னொரு இனத்திடம் அடிமைப் படல் விடுதலையல்ல. அது எண்ணெய்சட்டியில் இருந்து தப்பி நெருப்பில் விழுதல் போன்றதாகும்.
கடைசியாக விடிவெள்ளியை நோக்கி காத்திருத்தல் என்று மனிதர்களின்
வாழ்க்கை பல ஆண்டுகளாக நகர்ந்துதான் செல்கின்றன. பலயுகங்கள் சட்டென புராணக்கதைகளில் வருவதுபோல் மாயத் தோற்றம் எதையும் வாழ்க்கையிலும் வரலாற்றிலும் காண இயலாது.
இந்த வரலாற்றின் வழியான வாழ்வில் பலர் பலவற்றைச் சொல்லித்திரிவர். பலர் பலகுழுக்களாக பல கருத்துக்ளை விதைத்துக் கொண்டே போவார்கள். வீரியமுடைய வித்தாக இருந்தால் கல்லிடுக்கிலும் வேறூன்றி முளைத்தெழும்.
தரமற்ற வித்தானால் தரமான மண்ணில் விருந்தாலும் தடயம் தெரியாது மறையும்.
அதுபோல் ஒரு கூட்டம் தமிழ் அழிகிறது என்று சொல்லும். இன்னொரு கூட்டம் தமிழ்அழியும், அழிந்துவிடும் என்று கதறும். இன்னொரு கூட்டம் தமிழ் அழிந்தே விட்டது
என்று மரண ஓலமிடும். எந்த ஒன்றையும் கால ஓட்டத்தில் நிகழ்வதை தடுத்துவிட முடியாது.
ஆறு ஓரிடத்தில் தோன்றி பல இடங்களில் பாய்ந்து கடலில் கலப்பதுதான் இயற்கை. அதைக்கடலில் கலக்காமல் நீரைத் தேக்க வேண்டுமானால் வலுவான அணைகட்டினால் மட்டுமே சாத்தியம். பலமற்ற அணையாய் இருந்தால் அணையை உடைத்துக் கொண்டு நீர் கடலைச்சென்றடையும்.
இதைப்போன்று ஒரு மொழி அழியாமல் இருக்கவேண்டுமானால் அம்மொழி வலுவான மொழியாக வெட்ட வெட்ட துளிர்க்கும் மரம் போன்றிருக்க வேண்டும். வலுவற்ற மொழியாயிருப்பினும் அதைப்பாதுகாக்க ஆட்சி அதிகாரம் அம்மொழி பேசும் இனத்தவரின் கையில் இருக்க வேண்டும்.
குறைந்த அளவே மக்கள் பேசக்கூடிய நேற்று
தோன்றிய மொழிகூட அழியாது. எப்படி? அதைப்பேசக் கூடியவர்களுக்கென்ற நிரந்தரமான மண் மற்றும் அதை ஆட்சிசெய்யும் அதிகாரம் அந்த இனத்தவரின் கையில் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் அந்த மொழியை அழித்திவிட முடியாது.
மொழியைச் சிதைப்பவர்களை தடுக்கும்படி சட்டங்கள் இயற்றி தடுத்துவிடலாம். எதற்கும் அதிகாரம் கையில் இருக்கவேண்டும். அதிகாரம் மட்டும் கையில் இருந்தால்
காடுகளை அழிக்கலாம். மலைகளை உடைத்து தரை மட்டமாக்கலாம். விளைநிலத்தை அழித்து வீதி சமைக்கலாம், ஆழ்துளையிட்டு வாயு எடுக்கலாம். பசுமையான நிலத்தை பாலைவனம் ஆக்கலாம்.
-சங்கர சுப்பிரமணியன்.
(தொடரும்)
![]()