இலக்கியப்பேராளுமை ஜெயகாந்தன் ஏப்ரில் 24 பிறந்த தினம்!… முருகபூபதி.

நனவிடை தோய்தல் !
ஜே.கே. யிடம் கற்றதும் பெற்றதும் !!
ஜெயகாந்தன் பிறந்த தினத்தில் நனவிடை தோய்தல் !!!
முருகபூபதி
தமிழ்நாடு கோவில்பட்டிக்கு அருகாமையில் இடைசெவல் கிராமத்தில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனை 1984 இல் பார்க்கச்சென்றிருந்தேன்.
சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வந்து, கோவில்பட்டி – இடைசெவலுக்கு புறப்பட்டேன்.
சென்னையில் “ஜெயகாந்தனை பார்க்கவில்லையா?” என்று கி.ரா. கேட்டார்.
“இல்லை. அவரைப்பார்ப்பதற்கு ஏதோ தயக்கம். அவர் மிகவும் கோபக்காரர் என்று சிலர் சொல்லிக்கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால், அவரைச்சந்திப்பதில் எனக்கு ஆர்வம் இருக்கவில்லை” என்றேன்.
“உங்கள் கணிப்பு தவறு. அவர் பழகுவதற்கு இனியவர். அவரைச்சீண்டினால் என்ன, எவரைச்சீண்டினாலும் கோபம் வருவது இயல்புதானே. சென்னையிலிருந்து வெகு தூரம் என்னைப்பார்க்க வந்திருக்கிறீர்கள். ஆனால், அவரைப்பார்க்கத்தவறிவிட்டீர்களே… ! நீங்கள் திரும்பிச்செல்லும்பொழுது அவரையும் சென்னையில் பாருங்கள்.” என்றார் கி.ரா.
“மதுரைக்குத்திரும்பி, அங்கிருந்து இராமேஸ்வரம் சென்று கப்பல் மார்க்கமாக இலங்கை திரும்புகின்றேன். அடுத்ததடவை வரும்பொழுது நிச்சயம் ஜெயகாந்தனை
சந்திப்பேன்.” என்று கி. ரா. விடத்தில் சொன்னவாறு, மீண்டும் தமிழகத்திற்கு 1990 ஏப்ரிலில் சென்றவேளையில் நான் அவுஸ்திரேலியா வாசியாகியிருந்தேன்.
தமிழ்நாட்டில் எனது அம்மாவுடனும் குடும்பத்தினருடனும் மல்லிகை ஜீவாவுடனும் சுமார் ஒரு மாத காலம் சுற்றுலா சென்று, திரும்புவதற்கு முதல்நாள் கவிஞர் கண்ணதாசன் இல்லத்திலிருந்து ஜெயகாந்தனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டேன்.
“ ஜே.கே. இருக்கிறாரா?”
“ ஆம்….ஜே.கே.தான் பேசுகிறேன்.”
“வணக்கம். நான் முருகபூபதி. தங்களை சந்திக்கவிரும்புகின்றேன். முகவரியும் வரும் பாதையையும் சொல்லமுடியுமா? ” எனக்கேட்டேன்.
அவர் அப்பொழுது ஆழ்வார்பேட்டையில் தமது அலுவலகத்தை வைத்திருந்தார். அவருடைய பிரபலமான ஜாகை அந்த இடம். ஜே.கே.யின் தோழர்கள், இலக்கியவதிகள், சினிமா கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் அவரை சந்திக்கும் சத்திரம் என்றோ ஆசிரமம் என்றோ மடம் என்றோ குடில் என்றோ அதனை அழைக்கலாம் என்பார்கள்.
நான் இந்தத்தடவை பயணத்தில் ஜெயகாந்தனை நிச்சயம் சந்திப்பேன் என்று நண்பர் மல்லிகை ஜீவாவுக்கும் சொல்லிவைத்திருந்தேன். ஜீவா அடையாறில் இலக்கிய நண்பர் ரங்கநாதன் இல்லத்திலும் நான் குடும்பத்தினருடன் கோடம்பாக்கம் உமா லொட்ஜிலும் தங்கியிருந்தோம்.
நண்பர் கவிஞர் காவ்யன் விக்னேஸ்வரனை வழித்துணைக்கு அழைத்துக்கொண்டு கண்ணதாசன் இல்லத்திலிருந்து ஜெயகாந்தனை சந்திக்கச்சென்றேன்.
மாலை ஆறு மணியும் கடந்துவிட்டது.
ஜே.கே.யின் அலுவலகம் கலகலப்பாக இருந்தது. ஒரு பெரியமேசையைச்சுற்றி சிலர் அமர்ந்திருக்க ஜே.கே. சதுரங்கம் ஆடிக்கொண்டிருந்தார்.
என்னை அறிமுகப்படுத்தினேன். அமருமாறு கண்களினால் சைகை செய்துவிட்டு, அவர் தொடர்ந்தும் சதுரங்கம் ஆடிக்கொண்டிருந்தார். நிமிடங்கள் கரைந்தன. நான் வந்திருப்பதையே மறந்தவராய் அவர் விளையாட்டிலேயே கவனமாக இருந்தார்.
சொல்லிவிட்டுத்தானே வந்தேன். ஏன் இந்த அலட்சியம். நான் வந்திருக்கிறேன் என்று நினைவுபடுத்தினால் அவரது விளையாட்டை
குழப்பிவிடுமோ? அவருக்கு கோபம் வந்துவிடுமோ? உடன் வந்த நண்பர் விக்னேஸ்வரன் என்னைப்பார்க்கிறார். நான் அவரைப்பார்க்கின்றேன். நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது. உமா லொட்ஜில் குடும்பத்தினர் எனக்காக காத்திருக்கிறார்கள். மறுநாள் பயணம்.
பொறுமையுடன் ஜெயகாந்தன் அந்த சதுரங்க ஆட்டத்தை முடிக்கும் வரையில் காத்திருந்தேன். ஒருவாறு ஆட்டம் முடிந்தது. ஜெயகாந்தனே வெற்றிபெற்றார். உரத்த சிரிப்புடன் என்னை அருகே அழைத்து அமரச்செய்துவிட்டு, அருகிலிருந்தவர்களை அறிமுகப்படுத்தினார்.![]()
அவர்களில் ஒருவர் தூக்குமரநிழலில் நாவல் எழுதிய சி.ஏ. பாலன். அவர் கேரள இலக்கிய மேதை தகழி சிவசங்கரன் பிள்ளையின் ஏணிப்படிகள், ரண்டாங்கழி, கயிறு முதலான படைப்புகளை தமிழுக்கு வரவாக்கியவர்.
மற்றவர் கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி. சி.ஏ.பாலன் ஒரு காலத்தில் மரணதண்டனைக்கைதி. பின்னர் நிரபராதியெனக்கண்டு விடுதலையானவர். சிவகுமார் – லட்சுமி நடித்த இன்று நீ நாளை நான் என்ற திரைப்படத்தை எடுத்தவர்.
சுமார் 45 நிமிடங்கள் எனது பொறுமையை சோதித்து காக்கவைத்திருந்த ஜெயகாந்தன், அதன் பின்னர் சுமார் ஒரு மணிநேரம் மிகவும் கலகலப்பாக உரையாடினார்.
அதுதான் ஜெயகாந்தன் !
அவரது சதுரங்க ஆட்டத்தில் குறுக்கிட்டிருப்பேனேயானால், “ உனக்கு அவசரம்ணா போய்யா… என்று கோபத்தில் அவர் என்னை விரட்டிவிட்டிருக்கவும் கூடும்.
சதுரங்க ஆட்டத்தில் அப்பொழுது – அந்தக்கணங்களில் அவரும் அவருடன் விளையாடும் அந்தத்தோழர்களும்தான் அவருக்கு முக்கியம். தமிழக முதல்வரே வந்திருந்தாலும் கூட அவர் ஆட்டத்தை நிறுத்தியிருக்கமாட்டார்.
அதுதான் ஜெயகாந்தனின் கம்பீரம்.
கி.ரா. சொன்னதுபோன்று ஜெயகாந்தன் பழகுவதற்கு இனிமையானவர்தான் என்பதை அவர் அன்று என்னுடன் உரையாடிய அந்த ஒரு மணிநேரத்தில் புரிந்துகொண்டேன்.
இலங்கை -இந்திய ஒப்பந்தம் வந்து இந்தியப்படை இலங்கையில் பிரவேசித்தபொழுது
ஜெயகாந்தன் தெரிவித்திருந்த கருத்துக்கள் கடும் விமர்சனத்திற்குட்பட்டிருந்தன. ஏற்கனவே இந்திய இராணுவம் – சீனா – பாகிஸ்தானுடனான போர்களில்புரிந்த தியாகங்களினால் ஜெ.கே.வுக்கு இந்திய இராணுவத்தின் மீது மரியாதை இருந்திருக்கக்கூடும். அதே மரியாதையுடனேயே இலங்கையில் இந்திய இராணுவத்தின் பிரசன்னத்தையும் அவர் அவதானித்தார். ஆனால், இந்திய இராணுவம் புலிகளை வேட்டையாட முனைந்து அப்பாவித்தமிழ்மக்களின் உயிர்களைக்குடித்ததையும் உடைமைகளை சேதமாக்கியதையும் பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதையும் அவர் விமர்சனத்துக்குள்ளாக்காமல், இந்திய இராணுவம் தான் சென்ற நோக்கத்தை பூர்த்தி செய்யவில்லையென்றால் உடன் திரும்பியிருக்கவேண்டும் என்று மாத்திரம் பொதுப்படையாகச்சொல்லியிருந்தார்.
இந்திய இராணுவத்தின் அட்டுழியங்களை சித்திரிக்கும் ஆண்மை என்ற சிறுகதையொன்றை அக்காலப்பகுதியில் எழுதியிருந்தேன். அதனை இலங்கை – தமிழக இதழ்கள் பிரசுரிக்கவில்லை. எனினும் எனது இரண்டாவது கதைத்தொகுதியான சமாந்தரங்கள் (சென்னை தமிழ்ப்புத்தகாலயம் வெளியிட்டது) நூலில் அக்கதை இடம்பெற்றது.
அதனைப்பற்றிய கடுமையான விமர்சனத்தை தமிழ்நாடு மார்க்ஸிஸ்ட் இலக்கிய இதழ் தீக்கதிர் வெளியிட்டிருந்தது. தமிழ்ப்புத்தகாலய அதிபர் அகிலன் கண்ணன் அந்த விமர்சனத்தை எனக்குக் காண்பித்திருந்தார்.
இந்தப்பின்னணிகளுடன் ஜெயகாந்தனின் கருத்துக்களை அந்தச்சந்திப்பில் அறியமுற்பட்டபொழுது அவர் மீண்டும் சுருக்கமாக, “இந்திய இராணுவம் சென்ற நோக்கத்தில் கடமையை செய்யமுடியாவிடில் திரும்பியிருக்கவேண்டும்” என்று மாத்திரம் சொல்லிவிட்டதனால், இலக்கியத்தின்பக்கம் உரையாடலைத்திருப்பிக்கொண்டேன்.
அக்காலப்பகுதியில் அவர் படிப்படியாக எழுதுவதைக்குறைத்துக்கொண்டதையும் அவதானிக்க முடிந்தது.
நாம் உரையாடிக்கொண்டிருக்கும்பொழுது இரண்டுபேர் இயக்குநர் பாக்கியராஜாவின் பாக்கியா இதழிலிருந்து வந்தனர். ஜெயகாந்தன் தனது மாலைமயக்கம் சிறுகதைத்தொகுப்பை எடுத்து, அதில் ஒரு சிறுகதையை தெரிவுசெய்து பிரசுரிக்குமாறு சொல்லிக்கொடுத்தனுப்பிவிட்டு, விட்ட இடத்திலிருந்து
உரையாடலைத்தொடங்கினார். அவர் சிறுகதை – தொடர்கதை எழுதாமலிருந்தபோதிலும், ஏற்கனவே வெளியான அவரது படைப்புகள் ஏதாவது இதழ்களில் மறுபிரசுரமாகிக்கொண்டுதானிருந்தன.![]()
ஆனந்தவிகடனில் வெளியான பிரசித்திபெற்ற முத்திரைக்கதை அக்கினிப்பிரவேசம் ஆனந்தவிகடன் பொன்விழா மலரில் மறுபிரசுரம் கண்டது. ஆனால், அவரது சிறுகதைகளுக்கு முத்திரைக்கதை தகுதியை வழங்கிய ஜெயகாந்தனின் பல தொடர்கதைகளை வெளியிட்ட அதே ஆனந்தவிகடனின் பொன்விழாவில் அவர் கலந்துகொள்ளவில்லை.
ஏன்…? என்று கேட்டதற்கு, திவசச்சாப்பாடு என்று மாத்திரம் இரத்தினச்சுருக்கமாக பதில் அளித்தவர் ஜே.கே. அப்படிப்பேசக்கூடிய துணிவு அவருக்கேயுரித்தானது. அதுதான் ஜே.கே.
இவ்வாறு கண்டிப்போடும் கோபத்துடனும் பேசக்கூடிய ஒருவருடன் எச்சரிக்கையுடன் உரையாட வேண்டும் என்ற கவனத்துடனேயே வெகு பவ்வியமாக அவருடன் உரையாடினேன்.
இலங்கை வருமாறு அழைத்தேன்.
“மல்லிகைஜீவா தமிழகம் வரும்பொழுதெல்லாம் அழைக்கிறார். பார்ப்போம்… வருவோம்…. “ எனச்சொல்லிவிட்டு உரத்தகுரலில் சிரித்தார்.
ஜெயகாந்தனை படிக்காத தமிழ் எழுத்தாளர்களும் இல்லை. வாசகர்களும் இல்லை. தமிழ் இலக்கிய உலகில் எவராலும் தவிர்க்கமுடியாத- தமிழே தவிர்க்கமுடியாத ஆளுமைதான் ஜெயகாந்தன்.
அவரை அன்று சந்திக்க முன்பே அவருடைய பெரும்பாலான படைப்புகளையும் படித்து அவரது சில திரைப்படங்களையும் பார்த்திருக்கின்றேன். அவரைப்பற்றி சில பத்தி எழுத்துக்களை எழுதியிருக்கின்றேன். அவரது படைப்புகள், கருத்துக்கள் குறித்து இலக்கிய நண்பர்களுடன் விவாதித்திருக்கிறேன்.
தமிழக கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து ஜெயகாந்தன் ஒதுங்கிய அல்லது புறக்கணிக்கப்பட்ட காலப்பகுதியில், ஆனந்த விகடனின் முத்திரை எழுத்தாளராக உச்சத்திற்கு சென்றதும் மல்லிகையில் டொமினிக்ஜீவா எழுதிய ஒரு படைப்பாளியைப்பற்றி ஒரு சிருஷ்டியாளனின் பார்வை என்ற தொடர்கட்டுரை எம்மத்தியில் விவாதத்தை எழுப்பியிருந்தது. கட்டுரை முடிவுற்றதும் வெளியான எதிர்வினைகளையும் ஜீவா மல்லிகையில் பிரசுரித்தார்.
எமது வளர்மதி நூலகத்தில் ஜெயகாந்தனின் நூல்களையும் வைத்திருந்தோம். இலக்கிய நண்பர்கள் வட்டத்தில் அக்காலப்பகுதியில் ஜெயகாந்தன் ஒரு ஹீரோவாக கொண்டாடப்பட்டார்.
ஜெயகாந்தனும் தடாலடியாக அறிவிப்புகளை பிரகடனப்படுத்திக்கொண்டிருந்தார்.
நான் எந்தக்கட்சிக்கும் தாலி கட்டிக்கொண்டதில்லை.
எழுத்து எனது ஜீவன். ஜீவனம் அல்ல.
என்பன அவரது கம்பீரமான குறிப்பிடத்தகுந்த வாசகங்கள்.
ஜெயகாந்தன் செல்லுமிடமெங்கும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை விதைத்துவிட்டுவிடுவார். அதனை எதிர்க்கருத்துக்கள நீராகச்சுரந்து வளர்த்துவிட்டுவிடும்.
ஜெயகாந்தனிடம் நாம் கற்றுக்கொள்வதற்கும் குறிப்பிடத்தகுந்த சில பண்புகள் இருக்கின்றன என்பதற்கு நானறிந்த ஒரு சம்பவத்தை இங்கு பதிவுசெய்கின்றேன்.
1992 இல் நடந்த சம்பவம். இக்காலப்பகுதியில் கோவி. மணிசேகரனுக்கு அவர் எழுதிய குற்றாலக்குறிஞ்சி என்ற சரித்திர நாவலுக்கு சாகித்திய அகடமி விருது கிடைத்திருந்தது. குறிப்பிட்ட நாவலில் பல வரலாற்றுத்தவறுகள் இருப்பதாக எதிர்வினைகள் வெளியாகின. சிலர் சாகித்தியஅகடாமி தேர்வுக்குழுவினரை பகிரங்கமாக கடும் விமர்சனம் செய்துகொண்டிருந்தனர். அச்சமயம் சுபமங்களா ஆசிரியர் கோமல்சாமிநாதன் தமது நிருபரையும் ஒரு போட்டோகிராபரையும் அனுப்பி, சில மூத்த எழுத்தாளர்களிடம் குறிப்பிட்ட சாகித்திய விருது வழங்கலில் ஏற்பட்டிருக்கும் குழறுபடிகள் பற்றி கருத்துக்கேட்டுவருவதற்காக அனுப்பியிருந்தார்.
அந்த இருவரும் ஜெயகாந்தனிடமும் கருத்தறிய வந்தார்கள். அப்பொழுது ஜெயகாந்தன் தமது அலுவலகத்தில் குமுதம் குழுமத்தில் பணியாற்றிய பால்யூ என்ற நிருபருடன் உரையாடிக்கொண்டிருந்தார்.
கோமல்சாமிநாதன் அனுப்பிய இருவரும், தாம் வந்த காரணத்தை ஜெயகாந்தனிடம் சொன்னதும், அவர் விருட்டென எழுந்து கடும் கோபத்துடன், “ யாரோ விருது கொடுக்கிறான். யாரோ அதனை வாங்குகிறான். உங்களுக்கென்னைய்யா வயிற்றெரிச்சல்…போங்கடா… “ -என்று அடிக்காத குறையாக அந்த இருவரையும் விரட்டிக்களைத்துள்ளார்.
அதன் பின்னர் என்ன நடந்திருக்கும் ? அதே கோபத்துடன் திரும்பிவந்து அமர்ந்து அந்தக்கோபத்துக்கான காரணத்தைத்தானே வந்திருப்பவரிடம் சொல்லத்தோன்றும். ஏனென்றால் ஏற்கனவே வந்திருந்து உரையாடிக்கொண்டிருக்கும் குமுதம் குழும நிருபர் பால்யூ ஜெயகாந்தனின் கடும்கோபத்தை அக்கணமே நேரில் பார்த்தவர். ஆனால், ஜெயகாந்தன் முற்றிலும் ஆச்சரியப்படும்விதமாக அந்தக்கணநேர கோபத்தை தணித்துக்கொண்டு வெகு நிதானமாக, பால்யூவுடன் உரையாடலை – எந்த இடத்தில் நிறுத்தினாரோ அதே இடத்திலிருந்து தொடர்ந்தாராம்.
வந்தவர்களைப்பற்றியோ சுபமங்களா பற்றியோ கோமல் சாமிநாதன் பற்றியோ சாகித்திய விருது பெற்ற கோ. வி. மணிசேகரனைப்பற்றியோ அவர் எதுவுமே பேசவில்லையாம்.
தன்னைச்சந்திக்க வந்தவருக்கு எதிர்பாராத அந்தச் சம்பவமும் தமது இயல்பான தார்மீககோபமும் சம்பந்தமற்றது என்ற நாகரீகம் தெரிந்தவர் ஜெயகாந்தன் என்று பதிவு செய்கிறார் பால்யூ.
ஜெயகாந்தனின் கோபத்தை அவரை நன்கு தெரிந்தவர்கள் நிராகரிப்பார்கள். ஆனால் ஜெயகாந்தனை நிராகரிக்கவேமாட்டார்கள்.
ஜெயகாந்தனின் நீண்ட நாள் நண்பரும், சில குறும்படங்கள் எடுத்தவரும் , சிவாஜி கணேசன் மற்றும் ஜெயகாந்தன் ஆவணப்படங்களை எடுத்தவரும் , சிங்கப்பூர் பொது நூலகத்தில் முன்னர் பணியாற்றியவரும் ஜெயகாந்தன் மாஸ்கோவுக்கு சென்ற காலத்தில் அங்கு உயர்கல்வி பயின்றவருமான
நண்பர் கனடா மூர்த்தியும் மாஸ்கோவில் ஜே.கே.யுடன் கருத்து ரீதியாக மோதியவர்தான். ஆனால், ஜே.கே.யின் ஆத்மார்த்த நண்பர்களில் ஒருவர். ஜே.கே.யின் பிறந்த நாள் ஒவ்வொரு வருடமும் ஏப்ரில் மாதம் 24ஆம் திகதி வருகிறது. அந்நாளில் அவருடன் பலர் இருப்பார்கள். பிறந்தநாளை கொண்டாடுவார்கள்.
இந்திய சாகித்திய அகடாமி விருது, ஞானபீட விருது, தஞ்சை பல்கலைக்கழகத்தின் ராஜராஜசோழன்விருது, இந்திய மத்திய அரசின் பத்மபூஷன் விருது என்பனவற்றைப்பெற்றுள்ள ஜெயகாந்தன் சோவியத் நாட்டில் தமது ருஷ்ய மொழிபெயர்ப்பு நூல்களுக்காகவும் ரோயல்டி பெற்றவர்.
தென்னாற்காடு மாவட்டத்தில் கடலூரில் மஞ்சக்குப்பம் என்ற ஊரில் பிறந்து மூன்றாம் வகுப்பு வரையுமே கற்றுக்கொண்டு தமது 12 வயதில் வீட்டை விட்டு ஓடி டிக்கட் எடுக்காமல் ரயிலேறி சென்னைக்கு வந்து, கம்யூனிஸ்ட் கட்சியின் பாசறையில் வளர்ந்து படைப்பாளியான ஜெயகாந்தனை ஒரு சந்தர்ப்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணித்திருந்தாலும் அவருக்கு உயர் விருதுகள் கிடைத்த தருணங்களில் அதன் தலைவர்கள் நேரில் சென்றுவாழ்த்தினார்கள்.
ஜெயகாந்தன் 2008 ஜனவரியில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது அச்சமயம் தமிழ்நாடு மாநில கம்யூனிஸ்ட் கட்சியின் துணைச்செயலாளர் தோழர் மகேந்திரனுடன் சென்று பார்த்தேன். மருத்துவமனை கட்டிலில் வெகு உற்சாகமாகவே அமர்ந்து அடிக்கடி தனது மீசையை தடவியவாறு உரையாடினார். அப்பொழுது நடிகர் பார்த்திபனும் அவரைப்பார்க்க வந்தார்.
முதல் நாள் கமலஹாசன் வந்து பார்த்துவிட்டுப்போனதாகச்சொன்னார்.
தமிழ்த்திரையுலகில் முக்தா ஶ்ரீநிவாசன், நாகேஷ், சந்திரபாபு, சிவகுமார், ஸ்ரீகாந்த், லட்சுமி, எஸ்.வி.சுப்பையா, இயக்குநர்கள் பிம்சிங், மல்லியம் ராஜகோபால், விஜயன் உட்பட பலரின் இனிய நண்பரான ஜெயகாந்தனின் திரைப்படங்கள் இன்றும்பேசப்படும் காவியங்கள்.

உன்னைப்போல் ஒருவனையும் யாருக்காக அழுதானையும் திரைப்படங்கள் இயக்கும் எந்தவொரு முன்அனுபவமுமே இல்லாமல் தானே இயக்கியவர்.
அன்று மீண்டும் அப்பல்லோ மருத்துவமனையில் சந்தித்தவேளையிலும், “ ஒருதடவையாதல் இலங்கை வாருங்கள் “
என அழைத்தேன். “ வருவதற்கு விருப்பம்தான். ஆனால் , அதற்கான சூழ்நிலை இன்னும் உருவாகவில்லை. தான் அங்கே வருவேன் என்ற நினைப்பே அங்கிருக்கும் எனது நண்பர்களுக்கு சுகமானது. “ என உரத்துச்சிரித்துக்கொண்டு சொன்னார்.
விடைபெற்றுக்கொண்டு நானும் தோழர் மகேந்திரனும் திரும்பினோம்.
2011 இல் எமது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநட்டில் ஜே.கே. பற்றிய உலகப்பொது மனிதன் ஜெயகாந்தன் ஆவணப்படத்தை காண்பிக்க விரும்பி, அதனை தயாரித்து இயக்கிய ‘ கனடா மூர்த்தியை ‘ சிங்கப்பூரில் சந்தித்தேன்.
தொலைபேசியில் ஜெயகாந்தனை தொடர்புகொண்டு மாநாட்டில் காண்பிப்பதற்கான அனுமதியும் பெற்றேன்.
சிங்கப்பூரில் மூர்த்தி தமது அறையிலிருந்து குறிப்பிட்ட ஆவணப்படத்தின் இறுதி எடிட்டிங்கை செய்து கொடுத்ததுடன், அவரும் இலங்கை வந்து மாநாட்டில் கலந்துகொண்டு முதல்நாள் இரவு நிகழ்ச்சியில் அதனைக்காண்பித்தார்.
பேராசிரியர் சிவத்தம்பி நரேட்டராக இதில் தோன்றி ஜெயகாந்தனின் வாழ்வையும் பணிகளையும் ஆளுமையையும் தெரிவிக்கிறார். ஜெயகாந்தனின் இலக்கியம் – அரசியல் – ஆன்மீகம் – சமூகம் குறித்த பார்வைகளும் ஜெயகாந்தனைப்பற்றி அவரை நன்கறிந்தவர்களின் கருத்துக்களும் இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
தமிழ் சினிமாவும் ஜெயகாந்தனும் என்ற கட்டுரையும் முன்னர் எழுதியிருக்கின்றேன்.
1990 இல் சந்தித்த ஜெயகாந்தனுக்கும் 2008 இல் அதாவது 18 வருடங்களின்பின்னர் பார்த்த ஜெயகாந்தனுக்கும் இடையே நிறைய மாற்றம் தென்பட்டது. முதல் சந்திப்பில் அவர் நிறையப்பேசினார். இரண்டாவது சந்திப்பில் மிகவும் குறைவாகவே வார்த்தைகளை செலவிட்டார்.
அடிக்கடி ஆழ்ந்த மௌனம். அந்த மௌனமே ஒரு பாஷையாகத்தான் தெரிந்தது. அவர் மௌனம் ஒரு பாஷை என்ற தலைப்பில் ஆனந்தவிகடனில் ஒரு சிறுகதையும் எழுதியிருக்கிறார்.
ஜெயகாந்தன் 1971 இல் ஏன் எழுதுகிறேன் என்ற வானொலி உரையில்….
“எழுதுவதால் மேன்மையுறுகிறேன். அதற்காக எழுதுகிறேன்.
எழுதுவதால் எனது மொழி வளம் பெறுகிறது. அதற்காகவும் எழுதுகிறேன்.
எழுதுவதால் எனது மக்கள் இன்பமும் பலனும் எய்துகிறார்கள். அதற்காகவும் எழுதுகிறேன்.
எழுதுவதால் சமூகப்புரட்சிகள் தோன்றுகின்றன. அதற்காகவும் எழுதுகிறேன்.
எதிர்காலச்சமூகத்தை மிக உன்னத நிலைக்கு உயர்த்திச்செல்ல இலக்கியம் ஒன்று தேவை அதற்காகவும் எழுதுகிறேன்.
வாளினும் வலிமை பொருந்தியது எழுதுகோல். வாழ்க்கைப்போராட்டத்தில் நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட ஆயுதம்எழுதுகோல். அதனால் எழுதுகிறேன். எழுதுகோல் என் தெய்வம் “ என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார்.
பின்னாளில் அவர் பல வருடங்களாக எழுதவில்லை. “ ஏன்..? “ என்று கேட்டால் – “இதுவரையில் தான் எழுதியதைப்படியுங்கள். “ எனச்சொல்வார்.
அதுதான் ஜெயகாந்தன்.
தமது 81 வயதில் கடந்த 08-04 – 2015 ஆம் திகதி சென்னையில் மறைந்தார்.
—0—
letchumananm@gmail.com
![]()