கவிதைகள்

கதிரவன் எழுந்தனன்!…. ( கவிதை ) …… கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

கதிரவன் எழுந்தனன்
காரிருள் அகன்றது
பறவைகள் பாடின
பகலவன் மகிழ்ந்தனன்
நிலமகள் மலர்ந்தனள்
நீள்துயில் கலைந்தது
மலர்களின் வாசனை
வளியினில் கலந்தது
 
சங்கொலி கேட்டது
சன்னதி திறந்தது
மங்கல வாத்தியம்
மனமதை நிறைத்தது
கருவறை திறந்தது
கரமெலாம் குவிந்தன
மந்திரம் ஒலித்தது
மனந்தெளி வடைந்தது
 
மணிநிறை கதிர்கள்
மண்ணினைத் தொட்டன 
குலையொடு வாழைகள் 
தளர்விலா நின்றன
அணிலது கடியால்
சிதறின மாங்கனி 
அயர்விலா உழவர்
வயல்களில் இறங்கினர் 
 
கன்றுகள் ஓடின
கறவைகள் கத்தின
வண்டுகள் பறந்துமே
தேனினைச் சுவைத்தன
மயில்களும் ஆடின
குயில்களும் கூவின
பனித்துளி நிலமெலாம்
பளிச்சென சிரித்தது 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *