கவிதைகள்
நிறைந்திடும் சொர்க்கம்!…. ( கவிதை ) …. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மண்குடிசை வாழ்வு
மனமதிலே மகிழ்வு
மாடிமனை இருப்பு
மனமுழுக்க பொறுப்பு
வண்டிலிலே பயணம்
கண்டசுகம் நிறைவு
சொகுசுதரும் வண்டி
சுகமதுவோ இழப்பு
பஞ்சணையில் படுக்கை
நெஞ்சுவலி அணைப்பு
பளபளப்பு வாழ்கை
உளமுழுக்க தவிப்பு
ஓடிவரும்தென்றல்
ஆடிவரும் அருவி
நாடிவிடும் வாழ்க்கை
நாகரிகம் தருமா
நீர்நிலையில் நீந்தி
வேர்வைசிந்த உழைத்து
கூழ்பருகும் வாழ்க்கை
குவித்துவிடும் நலமே
தென்னையின் இளநீர்
சிறப்பான நுங்கு
அன்னையின் பாசம்
ஆனந்தம் அன்றோ ![]()
அம்மாவின் உணவு
பாட்டியின் கதைகள்
அமைந்திடும் வாழ்வு
நிறைந்திடும் சொர்க்கம்
![]()