கவிதைகள்

வாழ்வினில் வசந்தம் சேர்த்திடும் அன்றோ!… ( கவிதை ) … கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

நீரிடை  மீனும் நெடுங்கான  மானும் 

            பாரிடை முயலும் பறந்திடு புறாவும்

            ஆடிடும் மயிலும் அழைத்திடும் கிளியும்

            பாடிடும் குயிலும் பரவசம் அன்றோ  !

 

            பூத்திடு மலரும் புலர்ந்திடு பொழுதும்

      காத்திடு வரவும் கண்டிடு கனவும்

      கேட்டிடும் இசையும் கிளர்தெழும் உணர்வும்

      கூட்டிடும் நிலையும் குதூகலம் அன்றோ !

 

      பலாவது சுளையும் பசுவது பாலும்

      பாகொடு கலந்த பருப்புள உணவும்

      நிலாவது வரவும் நெருங்கிய துணையும்

      அமைந்திடு நிலமை ஆனந்தம் அன்றோ  !

 

      நிறைந்திடு தென்னை நெருங்கிடு கமுகு

      வளர்ந்திடு மூங்கில் வாய்த்த நல்காணி

      ஓடிடும் அருவி உரசிடும் தென்றல்

      வாழ்வினில் வசந்தம் சேர்த்திடும் அன்றோ !     

 

            பாட்டியின் கதையும் ஊட்டிய உணவும்             

      ஆட்டிய தொட்டிலும் அம்மாவின் இசையும்

      தோழினில் தூக்கிய அப்பாவின் பரிவும்

      வாழ்வினில் வசந்தம் சேர்த்திடும் அன்றோ !

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *