நாமல் சிறையில் அடைப்பு: தமிழ்க் கூட்டமைப்பு கொண்டாட்டம்

வடக்கில் உள்ள விகாரைகளில் இருந்து பொலிஸ் பாதுகாப்பு அகற்றப்பட்டு வருவதாகக் சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, நாட்டில் வடக்குக்கு ஒரு சட்டமும் தெற்குக்கு வேறொரு சட்டமும் இருக்கக் கூடாது என வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
“நாமல் ராஜபக்ச சிறையில் அடைக்கப்படும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்டவர்கள் மகிழ்ச்சியடையலாம்.
ஆனால், முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள எமது விகாரைகளில் இருந்து பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டு வருகின்றது. விகாரைகளுக்குச் செல்லும் மக்களும் தடுக்கப்படுகின்றனர்.
இந்த நிலைமையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. வடக்கில் ஒரு சட்டமும் தெற்கில் வேறொரு சட்டமும் நடைமுறையில் இருக்க முடியாது. இலங்கை என்பது ஒரே நாடாகும். புலம்பெயர் டயஸ்போராக்களின் தேவைக்கேற்ப இந்நாட்டை ஆள முடியாது; அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்” என சாமர சம்பத் தசநாயக்கதெரிவித்தார்.
![]()