சபை நடவடிக்கைக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தினால் தண்டனை வழங்க நேரிடும்; அர்ச்சுனா எம்.பி.க்கு கடும் எச்சரிக்கை

சபையின் நடவடிக்கைககளுக்கு இடையூறான வகையில் தொடர்ந்தும் நடந்துகொண்டால் பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கமைய உங்களுக்கு தண்டனை வழங்க நேரிடும் என்று குழுக்களின் பிரதித் தலைவரான ஹேமாலி வீரசேகர, யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கடுமையாக எச்சரித்தார்.
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற பாதுகாப்புப் பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் மீதான விவாதத்தின் போது, அர்ச்சுனா இராமநாதன் எம்.பி அடிக்கடி ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்பி சபை நடவடிக்கைகளுக்கு இடையூறாக செயற்பட்ட நிலையிலேயே சபைக்கு தலைமைதாங்கிய குழுக்களின் பிரதித் தலைவர் ஹேமாலி வீரசேகர, அவரை இவ்வாறு எச்சரித்தார்.
பாதுகாப்புப் பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, அடிக்கடி எழுந்து ஒவ்வொரு விடயங்கள் தொடர்பில் நிலையியல் கட்டளை இலக்கங்களை குறிப்பிட்டு அர்ச்சுனா இராமநாதன் எம்.பி
ஒழுங்கு பிரச்சினைகளை எழுப்பிக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் எதிர்க்கட்சி எம்.பி. சாமர சம்பத் விவாதத்தில் உரையாற்றும் போது, ஆளும் கட்சி உறுப்பினர்கள் அவருடன் தர்க்கங்களில் ஈடுபட்டனர். இதன்போதும் அர்ச்சுனா எம்.பி ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய போது, அவரை எச்சரித்த சபைக்கு தலைமைதாங்கிய குழுக்களின் பிரதித் தலைவர் ஹேமாலி வீரசேகர, பாராளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா இராமநாதன் சபை நடவடிக்கைகளுக்கு இடையூறான வகையில் நடந்துகொண்டால் நிலையியல் கட்டளை77, 78 மற்றும் 79இன் கீழ் தண்டனை வழங்க நேரிடும் என்று தெரிவித்தார். இதன்பின்னர் அர்ச்சுனா எம்.பி அமைதியாக இருந்தார்.
![]()