ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் ஜெனீவா தொடர் திங்கள் ஆரம்பம்; முதல் நாளில் இலங்கை குறித்து அறிக்கை

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 63 வது வருடாந்த கூட்டத்தொடர் நாளை 7 ஆம் திகதி திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில்,இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான சமீபத்திய அறிக்கை நாளை 7 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்தக் கூட்டத் தொடரானது நாளை திங்கட்கிழமை முதல் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை கூட்டத் தொடர் இடம்பெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தொடர் செப்டெம்பர் 7 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு இந்தோனேசியாவின் தூதுவர் சித்தார்தோ ரெசா சூர்யோடிபுரோ தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.
ஆரம்பக் கூட்டத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் உரையாற்றவுள்ளார்.
ஒரு மாதம் நீடிக்கும் இக்கூட்டத்தொடரில், விசேட நடைமுறைகளின் ஆணை பெற்றவர்கள், நிபுணர் பொறிமுறைகள் மற்றும் புலனாய்வுப் பொறிமுறைகளை உள்ளடக்கிய 37 ஊடாடும் கலந்துரையாடல்களை பேரவை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், உயர்ஸ்தானிகர், மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் ஆகியோரால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகள் மற்றும் புதுப்பிப்புகள் குறித்தும் இக்கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்படும்.
இந்தக் கூட்டத்தொடரின் போது பரிசீலிக்கப்படவுள்ள விடயங்களில், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் எழுத்துமூலமான புதுப்பிக்கப்பட்ட அறிக்கை உள்ளடக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையானது நேற்று வௌியாகியிருந்தது.
![]()