உலகம்

போர், மோசமான வானிலையால் உலகளவில் உச்சம் தொட்ட உணவுப் பொருட்களின் விலை

உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் , 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதிக்குப் பிந்தைய மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மோசமான வானிலை மாற்றம் மற்றும் கருங்கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் இடையூறுகள் காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விநியோகத்தில் அச்சம் ஏற்பட்டுள்ளதாலேயே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் வர்த்தகம் செய்யப்படும் உணவுப் பொருட்களின் மாதாந்த விலை மாற்றங்களைக் கண்காணிக்கும் ஐ.நா.வின் ‘உணவு விலைக் குறியீடு’ (FAO Food Price Index), ஜூலை மாதத்தின் திருத்தப்பட்ட 130.8 புள்ளிகளிலிருந்து ஆகஸ்ட் மாதத்தில் சராசரியாக 133.3 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.

ரஷ்யா – உக்ரைன் இடையே முழு அளவிலான போர் தொடங்கியதைத் தொடர்ந்து 2022 மார்ச் மாதத்தில் எட்டப்பட்ட சாதனை உச்சத்தை விட இது 17% குறைவாக இருந்தாலும், 2022 நவம்பர் மாதத்திற்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த புள்ளியாகும்.

“ஆகஸ்ட் மாதத்தில் உலகளாவிய உணவு விலைகளின் உயர்வைக் காண்கையில், உணவுச் சந்தைகளில் அபாயக் காரணிகள் மீண்டும் தலைதூக்கியுள்ளன என்பது தெளிவாகிறது.

காலநிலை மாற்ற அதிர்ச்சிகள், பூகோள அரசியல் பதற்றங்கள் மற்றும் வர்த்தகப் போக்குவரத்து இடையூறுகள் ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்து உணவு விநியோகத்தை முடக்கியுள்ளன” என FAO வின் தலைமைப் பொருளாதார நிபுணர் மெக்சிமோ டோரேரோ (Maximo Torero) தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தானியங்கள், தாவர எண்ணெய்கள், சர்க்கரை, இறைச்சி மற்றும் பால் பொருட்கள் ஆகிய அனைத்துப் பொருட்களின் சர்வதேச விலைக் குறியீடுகளும் ஆகஸ்ட் மாதத்தில் அதிகரித்துள்ளதாக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவில் நிலவிய தீவிர வானிலை மாற்றம், சோளம் மற்றும் சர்க்கரைக்கிழங்கு விளைச்சல் மற்றும் கால்நடை உற்பத்தியைப் பாதித்துள்ளது.

அதேவேளை, ஆசியாவில் வரவிருக்கும் ‘எல் நினோ’ (El Nino) காலநிலை மாற்றத்தின் தாக்கம், பாமாயில் மற்றும் சர்க்கரை உற்பத்தியைக் குறைக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

4.5 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாகக் கருங்கடல் பகுதியில் அதிகரித்துள்ள தாக்குதல்கள், தானியக் கப்பல் போக்குவரத்தைக் கணிசமாகக் குறைத்துள்ளன. அதே சமயம், அமெரிக்கா – ஈரான் மோதலானது பயிர்களுக்கான உர விநியோகத்தை வெகுவாகப் பாதித்துள்ளது.

உணவு வகைகளின் அடிப்படையில் விலையேற்றம்

தானியங்களுக்கான விலைக் குறியீடு முந்தைய மாதத்தை விட 2.2% அதிகரித்து, 2024 மே மாதத்திற்குப் பிந்தைய மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது.

தாவர எண்ணெய் விலைக் குறியீடு 0.6% உயர்ந்து, 2022 ஜூன் மாதத்திற்குப் பிந்தைய உச்சத்தைத் தொட்டுள்ளது.

பிரேசிலின் முக்கிய மத்திய-தெற்குப் பகுதியில் சர்க்கரை உற்பத்தி குறைந்துள்ளமை, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் வானிலைப் பாதிப்புகளுடன் இணைந்ததால், சர்க்கரைக் குறியீடு 11.9% வரை கணிசமாக உயர்ந்து 2025 ஜூன் மாதத்திற்குப் பிந்தைய உச்சத்தைத் தொட்டுள்ளது.

ஐரோப்பாவின் தீவிர வெப்ப அலை மற்றும் வறட்சி, கடுமையான ‘எல் நினோ’ அச்சுறுத்தல், உக்ரைன் மற்றும் ஈரான் போர்களால் ஏற்பட்டுள்ள வர்த்தகச் சிக்கல்கள் ஆகியவை விவசாயச் சந்தைகளை உலுக்கியுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *