22 ஆவது திருத்தம்; உயர் நீதிமன்றுக்கு 3 வார அவகாசம்!

அரசியலமைப்பிற்கான முன்மொழியப்பட்ட 22-வது திருத்தத்திற்கு மக்கள் வாக்கெடுப்பு தேவையா என்பதைத் தீர்மானிக்க உயர் நீதிமன்றத்திற்கு நேற்று (செவ்வாய்) முதல் மூன்று வார கால அவகாசம் உள்ளது என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நேற்று (01) தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (01) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ஊடகச் சந்திப்பில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
முன்மொழியப்பட்ட திருத்தத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களையும் பரிசீலித்த பின்னரே, அது குறித்த தனது தீர்மானத்தை உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்திற்குத் தெரிவிக்கும்.
அரசாங்கமோ அல்லது எதிர்க்கட்சியோ கோரிக்கை விடுத்தாலும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அல்லது முடிவு இல்லாமல் முன்மொழியப்பட்ட இந்தத் திருத்தம் குறித்து பொது வாக்கெடுப்பை நடத்த முடியாது என்றும் அவர் இதன்போது மேலும் கூறினார்.
![]()