கவிதைகள்

“இன்சொற்கள் பேசுவோம் இன்பமாய் வாழுவோம்” …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

நலந்தரும் சொல்லை நாராயணா என்றார்
நற்றுணை யாவது நமச்சிவாயவே என்றார்
ஈசனடி போற்றி எந்தையடி போற்றி
இப்படிச் சொற்களை எடுத்துமே இயம்பினார்
 
அன்பு என்பதும் பாசம் என்பதும்
நலமா என்பதும் வளமா என்பதும்
வாழ்க என்பதும் வாழ்த்து என்பதும்
நலந்தரும் சொல்லாய் சொல்கிறார் அனைவரும் 
 
இனியதை நல்கிடும் எல்லாம் நல்லதே
இதயத்தை உடைப்பது இனியவை அல்லவே
இன்பம் நல்கிடும் எல்லாம் நல்லதே
இன்பம் பெருகிட  உரைப்போம் நல்லவை
 
ஐயா என்றால் அன்போடு பார்ப்பார்
அம்மா என்றால் அணைத்திட வருவார்
அண்ணா அக்கா தம்பி தங்கை
அமுதத் தமிழில் அமைந்த நல்வார்த்தைகள்
 
ஐயா எனவோங்கி எனவுரைத்தார் வாசகர்
அம்மையே அப்பா என்றுமவர் மொழிந்தாரே
மாமனாய் மாமியாய் விழித்தார்கள் ஆண்டவனை
அத்தனையும் அமுதத் தமிழீந்த சொற்களே 
 
பொறுப்புடன் சொற்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
பொல்லாத   சொற்களைத்   தள்ளிவிட    வேண்டும்
இனிமையுடன் பேசினால் இதயத்தில் அமரும்
இன்சொற்கள் பேசுவோம் இன்பமாய் வாழுவோம்  !
  மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
     மெல்பேண்   ….. அவுஸ்திரேலியா 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button