உலகம்

டொராண்டோவில் ‘லிஜியோனைர்ஸ்’ சுவாச நோய் பரவல்

கனடாவின் டொராண்டோ நகரின் மையப்பகுதிக்கு அருகில் ‘லிஜியோனைர்ஸ்’ என்ற சுவாச நோய் பரவி வருவதாக டொராண்டோ பொதுச்சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

பாத்ஹர்ஸ்ட் மற்றும் டுபாண்ட் வீதிகளின் சந்திப்பில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் சுற்றளவில் இந்நோய் பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

அப்பகுதியில் வசிக்கும், பணிபுரியும் அல்லது வந்து சென்ற 6 பேருக்கு இந்நோய் பாதிப்பு இருப்பது இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.

டொராண்டோவில்

ஜூலை 2 முதல் ஜூலை 26 வரையிலான காலக்கட்டத்தில் இவர்களுக்கு இந்நோய்க்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.

மேலும், அருகில் உள்ள ‘கேஸ்டில்வியூ விச்வுட் டவர்ஸ்’ முதியோர் பராமரிப்பு இல்லத்தில் கண்டறியப்பட்ட 5 லிஜியோனைர்ஸ் நோய் பாதிப்புகளுக்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நோய் ‘லிஜியோனெல்லா’ என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இது நீர் ஆதாரங்கள், குளிர்விக்கும் கோபுரங்கள், வெந்நீர்த் தொட்டிகள், தெளிப்பான்கள் மற்றும் அலங்கார நீரூற்றுகள் போன்ற செயற்கை நீர் அமைப்புகளில் காணப்படுகிறது.

பாக்டீரியா கலந்த நுண்ணிய நீர் துளிகளைச் சுவாசிப்பதன் மூலம் இந்நோய் பரவுகிறது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நேரடியாகப் பரவாது என்பதால், மக்களுக்குப் பெரிய அளவில் ஆபத்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் தசை வலி போன்றவை இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும்.

முதியவர்கள், புகைபிடிப்பவர்கள் மற்றும் ஏற்கனவே உடல்நலக் குறைபாடு உள்ளவர்களுக்கு இந்நோய் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

நோய் பரவலுக்கான முதன்மைக் காரணத்தைக் கண்டறியும் முயற்சியில் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதுடன், கூடுதல் பாதிப்புகளை உடனடியாக அடையாளம் காண உள்ளூர் மருத்துவமனைகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button