ஷிரான் பாசிக்கின் பயங்கரவாத அமைப்புகளுடனான தொடர்பு! அம்பலப்படுத்தும் காவல்துறை

துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்து வந்ததுள்ளது தற்போது கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது காவல்துறை செய்தித் தொடர்பாளர் உதவி காவல் கண்காணிப்பாளர் எஃப். யு. வூட்லர் இதனை கூறியுள்ளார்.
அதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பு காவல் கண்காணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, ஷிரான் பாசிக்கை 72 மணி நேரம் காவலில் வைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.
ஷிரான் பாசிக் நேற்று இரவு அபுதாபியிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு, பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார். 48 வயதான இவர் தெஹிவளைவைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது.
இந்த நாட்டிற்கு போதைப்பொருள் விநியோகிக்கும் ஐந்து பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராகக் கருதப்படும் ஷிரான் பாசிக், மே 26 அன்று துபாயில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இன்டர்போல் அவருக்கு சிவப்பு பிடியாணை அனுப்பியிருந்த பின்னணியில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மேலும், ஷிரான் பாசிக்கிற்குச் சொந்தமானது என்று கூறப்படும் தெஹிவளையில் உள்ள ஒரு ஹோட்டலை 2024 ஜனவரி 1 அன்று இடிப்பதற்கான நடவடிக்கைகளையும் காவல்துறை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
![]()