இலங்கை

செம்மணி அகழ்வுகள் தமிழர் இனப்படுகொலையின் தீவிரத்தை உலகிற்கு உணர்த்தும்; அருட்தந்தை மா. சத்திவேல்

செம்மணி சமூக புதைகுழி அகழ்வுப் பணிகள் இலங்கையில் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையின் தீவிரத்தை சர்வதேச சமூகத்திற்கு உணர்த்துவதுடன், தமிழர் தாயக மக்களை அரசியல் நீதிக்கான மக்கள் சக்தியாக உருவெடுக்கச் செய்துள்ளதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா. சத்திவேல் தெரிவித்துள்ளார்.

வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் சமூக புதைகுழி வரலாற்றில் செம்மணி சமூக புதைகுழி இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் அடிப்படையில் தென்னாசியாவின் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது மட்டுமல்ல, தமிழர் தாயகத்தில் ஆற்ற முடியாத வேதனை மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

இது இலங்கையில் நடந்தேறிய இனப்படுகொலையின் அகோரத்தினை சர்வதேசத்துக்கு உணர்த்தியுள்ளதோடு தமிழர் தாயக மக்களை அரசியல் நீதி கோரிக்கைக்கான மக்கள் சக்தியாக உருவெடுக்கவும் வழிவகுத்துள்ளது.

இதற்கு முகங்கொடுக்க முடியாத சிங்கள பௌத்த பேரினவாதம் அரச பயங்கரவாதம் நிகழ்த்திய இனப்படுகொலையினை மூடி மறைக்க தமிழர்கள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்த தெற்கின் மக்களை அணி திரட்டுவதாகவே தோன்றுகிறது.

இதற்கு தாயக செயலணியின் “நீதியின் ஓலம்” பதிலாக அமையும் என்றும்; ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை, இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என உறுதி செய்து தமிழர்கள் ஏற்கும் நீதியை நிலைநாட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றோம்.

இதுவரை செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள உடலங்களின் எச்சங்கள் தனித்தனியாகவும், குவியல்களாகவும், தாய்மார் குழந்தைகளை அரவணைத்தவாறும், தலைகள் இன்றியும், உடல் சிதைக்கப்பட்டதாகவுமென பல்வேறு கோணங்களில் 550க்கு அதிகமான எலும்புக்கூடுகள் அகழப்பட்டுள்ளன. தொடர்ந்து அகழப்படுமாயின் இதன் எண்ணிக்கை ஆச்சரியத்தை மட்டுமல்ல, இலங்கையின் அரச பயங்கரவாதம் நிகழ்த்திய தமிழருக்கு எதிரான இனப்படுகொலையின் தீவிரத்தையும் உலகிற்கு உணர்த்தி நிற்கும்.

தமிழர்களைப் பொறுத்தவரையில் படையினர் எந்தெந்த படைத்தளங்களில் இருந்து அகழ முடியாது எனக் கூறுகின்றனரோ, எந்தெந்த படைத்தளங்களை அகற்ற முடியாது எனக் கூறுவதோடு அதனை விஸ்தரிப்பதற்கும் முயற்சி எடுக்கின்றனரோ அந்த படைத்தளங்களிலும், பலவந்தமாகவும் சட்டவிரோதமாகவும் கட்டப்பட்ட விகாரைகள் அமைந்துள்ள நிலங்களிலும் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஏனெனில், அங்கெல்லாம் சித்திரவதைக்கு உட்படுத்தி இனப்படுகொலைக்கு உள்ளான தமிழர்கள் மர்மமான முறையில் புதைக்கப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகம் தமிழர்கள் மத்தியிலே நிலவுகின்றது.

தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் மீது நம்பிக்கையற்ற நிலையில் சமூக புதைகுழிகளின் அகழ்வுப் பணியில் இருந்து நீதிமன்ற கட்டளையின்படி எச்சங்களை பாதுகாத்தல், ஆய்வுகள், தீர்வுகள் என்பன வரை தமிழர்களின் நம்பிக்கையை ஏற்கும் சர்வதேச நிபுணர்களின் கண்காணிப்புச் செயற்பாடுகள் அவசியம் என வலியுறுத்துகின்றோம்.

இந்த நிலையில் தமிழர் தாயகத்தில் செம்மணியை மையப்படுத்தி அரசியல் போராட்டம் கூர்மை அடைந்துவிடுமோ என்ற பயத்தில் தெற்கின் சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழர்களை குற்றவாளிகளாக்கும் செயற்பாட்டுக்காக அணி திரள்வதையும் காணக் கூடியதாக உள்ளது. அதற்கு தற்போதைய அரசாங்கமும் துணை நிற்பதாகவே தோன்றுகின்றது.

இனவாதியும் முன்னாள் அமைச்சருமான ஒருவர் சிங்களவர்களின் வரிப்பணத்திலேயே செம்மணி அகழ்வுப்பணிகள் நடக்கின்றன. அவர்கள் சிங்களவர்களுக்கு எதிராகவே செயற்படுகின்றனர்” எனும் தொனியில் பேசி அடிமட்ட சிங்களவர்களை தமிழர்களுக்கு எதிராக தூண்டுகையில் இன்னும் ஒரு அமைப்பு ஊடக சந்திப்பு ஒன்றில் வடக்கு கிழக்கில் தமிழர்கள் தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் பௌத்த அடையாளங்களை எல்லாம் அழிக்கின்றார்கள் என குற்றம் சுமத்துவதையும் காணலாம்.

மட்டக்களப்பில் மேய்ச்சல் தரை மீட்புக்கான போராட்டம் தமிழர்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், அரசாங்கத்தோடு பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தியும் தீர்வின்றி தொடர்கையில் மேய்ச்சல் தரை சிங்களவர்களுக்கே உரியது என தெற்கை உசுப்பேத்தும் செயற்பாடும் இன்னொரு பக்கம் நடந்துகொண்டிருக்கின்றது.

அடுத்ததாக யுத்த காலத்தில் உயிர் பாதுகாப்பு கருதி கடல் வழியாக தப்பிச் சென்று இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்தோரை இலங்கை அரசாங்கம் எத்தகைய முன்னாயத்தம் இன்றி இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கையில் இதற்கு எதிராகவும் குரல் கொடுக்கும் பேரினவாதிகள் வடக்கிலே சிங்களவர்களை குடியேற்ற வேண்டும் என்ற கோசம் எழுப்புவதையும் கேட்கக்கூடியதாக இருக்கின்றது.

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு அண்மையில் பாதை அமைப்பது தொடர்பில் பொலிஸார் கோரிய தடை உத்தரவினை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாத நிலையில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் தெற்கில் இயங்கும் தேசிய பாரம்பரிய உரிமைகள் பாதுகாப்பு மையம் என்ற அமைப்பு கருத்து தெரிவித்து வருவதையும் சிங்கள மக்களை தமிழர்களுக்கு எதிராக தூண்டுவதையும் சமூக ஊடகங்களில் பார்க்கக்கூடியதாக உள்ளது.

தெற்கில் இயங்கும் தமிழர் விரோத இனவாத அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கொழும்பு பணிமனையில் மகஜர் ஒன்றை கையளித்த பின்னர் தையிட்டி சட்டவிரோத விகாரை விடயமாகவும், செம்மணி அகழ்வு சம்பந்தமாகவும் பிழையான தகவல்களை வழங்கி தமிழர்களுக்கு எதிரான கோபத்தினை சிங்கள மக்கள் மத்தியில் தூண்டி எண்ணெய் ஊற்றுவதை சமூக ஊடங்களில் அறியக்கூடியதாகவும் உள்ளது.

எத்தகைய இனவாத செயற்பாடுகளுக்கும் எங்களுடைய அரசாங்கத்தில் இடமில்லை என்று கூறுகின்ற தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்கு பயந்து தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பான உண்மை நிலையையும் வெளிப்படுத்தாது, பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியையும் பெற்றுக்கொடுக்காது காலத்தை இழுத்தடிப்பதும் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு துணை போகும் செயலாகவே நாம் கருதுகின்றோம்.

தெற்கின் சிங்கள பௌத்த பேரினவாத அமைப்புக்கள் ஓரணியில் திரண்டு வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ள நிலையில் இதன் அபாயத்தை உணர்ந்து தமிழ் தேசிய நிலைப்பாட்டில் உள்ள சிவில் சமூக அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்பதற்கான நீதிக் குரலே செம்மணியில் ஒலிக்கின்றது என்பதை உணர்ந்து நீதியின் ஓலத்தில் பங்குபற்றுவதுடன் தேசியம் காக்கும் அரசியல் செயற்பாட்டிலும் தொடர்ந்து இயங்க முன்வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button