2047 இல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறும்: பிரதமர் மோடி

இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவுபெறும் 2047 ஆம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது பிரதமர் மோடி கூறியவை வருமாறு ,
“சுதந்திர போராட்ட வீரர்கள், தியாகிகளை நாம் நினைவு கூரவேண்டும்.வந்தே மாதரம் ஒவ்வொரு இந்தியர்களின் இதயத்திலும் ஒலிக்கிறது.
ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி பறக்கிறது; இன்று டெல்லி செங்கோட்டையில் வந்தே மாதரம் ஒலிக்கிறது, இது வரலாற்றின் முக்கிய நாள். நாடு சரித்திர நிகழ்வை காண்கிறது.
சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் ஆன 2047ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும். இந்தியர்களின் கனவுகள் பெரியதாக இருக்க வேண்டும்; அப்பொழுது தான் நாம் புதிய உயரங்களை அடைய முடியும்.
கடந்த 12 ஆண்டுகளாக, இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல அனைவரும் முயற்சித்து வருகின்றனர்; இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. மேக் இன் இந்தியா திட்டத்தால் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது.
இந்தியாவின் வளர்ச்சியை உலகமே உற்றுநோக்குகிறது. ஒரு காலத்தில் இந்தியாவின் பொருளாதாரத்தை பலவீனமான ஐந்து நாடுகளின் பட்டியலில் உலகம் சேர்த்திருந்தது; மக்களின் முயற்சியால் கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா முக்கியப் பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது.
நாம் பிற நாடுகளைச் சார்ந்திருக்க முடியாது; நாம் சுயசார்பு கொண்டவர்களாக மாற வேண்டும். உள்ளூர் பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்; ஒவ்வொரு இந்தியரும் இப்போது உள்ளூர் பொருட்களுக்கு முன்னுரிமை மற்றும் சுதேசி தயாரிப்புகளை ஆதரிக்கின்றனர்.” இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.
![]()