இலங்கை

மிகப் பெரிய கப்பம் வசூலிப்பவர் என்ற பெயரையும் கோட்டாபயவுக்கு பெற்றுக்கொடுத்தது அடுத்த குற்றச்சாட்டு

அரசுக்கு சொந்தமான ரக்னா பாதுகாப்பு லங்கா நிறுவனத்திற்கு மாதந்தோறும் கிடைக்க வேண்டிய சுமார் 4 இலட்சம் அமெரிக்க டொலர் வருவாயில் 80 சதவீதத்தை அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு வழங்கும் வகையில், அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச தலையிட்டதாக கோப் (COPE) குழு விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரக்னா பாதுகாப்பு லங்கா நிறுவனம் தொடர்பாக கோப் குழுவில் நடைபெற்ற விசாரணையின்போது இந்த தகவல்கள் வெளியாகின.

மேலும், அந்த அரச நிறுவனத்துக்குச் சொந்தமான 219 துப்பாக்கிகள் அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்ததாகவும், அவற்றில் 139 துப்பாக்கிகள் தற்போது எங்கு உள்ளன என்பது கூட கண்டறிய முடியாத நிலை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ராஜபக்சவின் தீவிர ஆதரவு

கோட்டாபய ராஜபக்சவின் நெருங்கியவராகக் கூறப்படும் நிஸ்ஸங்க சேனாதிபதிக்கு சொந்தமான அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு மாதந்தோறும் சுமார் 3,20,000 அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கும் வகையில், அமைச்சரவை அனுமதி இன்றியே இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், இதன் காரணமாக அரசுக்கு கிடைக்க வேண்டிய சுமார் 4 இலட்சம் அமெரிக்க டொலர் மாதாந்திர வருவாய் இழக்கப்பட்டதாகவும் கோப் குழு விசாரணையில் விளக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான விரிவான கோப் குழு விசாரணை காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அரசியல் வரலாற்றில் தேசிய பாதுகாப்பு, பில்லியன் கணக்கான ரூபாய் ஊழல் மற்றும் ஆட்சி மாற்றங்களின் திசையை தீர்மானித்த மிக முக்கியமான விவகாரமாக ‘அவன்கார்ட்’ (Avant-Garde) கடல்சார் பாதுகாப்பு நிறுவனத்தின் சர்ச்சை விளங்குகிறது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தீவிர ஆதரவோடு கட்டியெழுப்பப்பட்ட இந்த வணிகக் பேரரசு, தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஊழலுக்கு எதிரான அரசியல் கொள்கையினால் ஒரு கட்டத்தில் சரிவை சந்தித்தது. மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் (2015க்கு முன்னர்) கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்த போதே, அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதியின் அசுர வளர்ச்சி ஆரம்பமானது.

அதுவரை இலங்கை கடற்படைக்கு நேரடியாகக் கிடைத்து வந்த சர்வதேச கடல்சார் பாதுகாப்புச் சேவைகள் மற்றும் ஆயுதக் களஞ்சிய பராமரிப்பு மூலமான பெரும் வருமானம், திடீரென அவன்கார்ட் என்ற தனியார் நிறுவனத்திற்கு தாராளமாக கைமாற்றப்பட்டது.

மேலும், பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கிய ‘ரக்ச லங்கா’ (Rakna Lanka) நிறுவனத்துடன் அவன்கார்ட் நிறுவனம் ஒரு சர்சைக்குரிய ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இதன் மூலம் கோட்டாபய ராஜபக்ச தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, அரசாங்கத்திற்குச் சொந்தமான நவீன ஆயுதங்களை ஒரு தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்ல அனுமதித்தார் என்ற பலத்த குற்றச்சாட்டு எழுந்தது.

வெளிச்சத்திற்கு வந்த முறைகேடு

2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ‘நல்லாட்சி’ அரசாங்கம் பதவியேற்றதைத் தொடர்ந்து, பாதுகாப்புத் துறையில் நடந்த இந்த மாபெரும் முறைகேடு வெளிச்சத்திற்கு வந்தது.

அதனை தொடர்ந்து காலி கடற்பரப்பில் நிறுத்தப்பட்டிருந்த ‘MV Avant-Garde’ கப்பலை சோதனையிட்ட போது, அதில் 816 சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் லட்சக்கணக்கான தோட்டாக்கள் கண்டறியப்பட்டன.

இது சர்வதேச கடல் எல்லையில் இலங்கை அரசுக்கு பெரும் அவமதிப்பை ஏற்படுத்தியது. இந்த முறைகேடான ஒப்பந்தம் காரணமாக இலங்கை அரசாங்கத்திற்கு 11.4 பில்லியன் ரூபாய்க்கும் அதிக வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இதில் கோட்டாபய ராஜபக்ச மற்றும் நிசங்க சேனாதிபதி உள்ளிட்டோர் பிரதான பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டனர். 2019 ஆம் ஆண்டின் இறுதியில் கோட்டாபய ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்றதும், அவன்கார்ட் மீதான சட்டப் பிடிகள் அனைத்தும் அரசியல் செல்வாக்கின் மூலம் தளர்த்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

2021 மே மாதத்தில், கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய விசேட நீதியரசர்கள் ஆயுதக் கடத்தல் வழக்கில் இருந்து நிசங்க சேனாதிபதி உள்ளிட்ட அனைத்து பிரதிவாதிகளையும் முற்றாக விடுதலை செய்தனர்.

தொடர்ந்து கோட்டாபய ராஜபக்சவின் அரசியல் சித்தாந்தப் பிரிவான ‘வியாத்மக’ (Viyathmaga) அமைப்பில் நிசங்க சேனாதிபதி மிக முக்கிய நிதியுதவியாளராகவும், செல்வாக்கு மிக்க நபராகவும் வலம் வந்தார்.

ஊழலுக்கு எதிராகப் போர்க்கொடி

இதன் காரணமாகவே நுகேகொடை மற்றும் கம்பஹா பகுதிகளில் ஜே.வி.பி நடத்திய அரசியல் கூட்டங்களில் அவன்கார்ட் நிறுவனத்திற்கு எதிராகப் பேசும் போது கடுமையான அரசியல் மோதல்கள் வெடித்தன.

இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு கம்பஹாவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் (NPP) மாநாட்டில் கலந்து கொள்ள வந்த அநுர குமார திஸாநாயக்க மீது நடத்தப்பட்ட முட்டை வீச்சுத் தாக்குதலுக்கு பின்னணியில், நிசங்க சேனாதிபதியின் ஆட்களே இருந்ததாக ஜே.வி.பி (JVP) பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தது.

அதன் பின் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதும், இலங்கையின் அரசியல் மற்றும் பாதுகாப்புச் சூழல் முற்றிலும் மாறியது.

ஊழலுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய அநுர அரசு, அவன்கார்ட் நிறுவனத்தின் ஏகபோக உரிமையை ஒடுக்கத் தொடங்கியது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது பாதுகாப்பு அமைச்சின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, 2025 ஆகஸ்ட் மாதம் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.

இதன் மூலம், அவன்கார்ட் வசம் இருந்த கடல்சார் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் ஆயுதங்களைச் சேமிக்கும் அதிகாரம் அனைத்தும் மீண்டும் முழுமையாக இலங்கை கடற்படையிடம் (Sri Lanka Navy) ஒப்படைக்கப்பட்டது.

இதன் விளைவாக, தனியார் நிறுவனங்களின் கைகளுக்குச் சென்ற பில்லியன் கணக்கான டாலர் வெளிநாட்டு வருமானம், தற்போது நேரடியாக திறைசேரிக்கு செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 2025 இல், பழைய ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நிசங்க சேனாதிபதி மீண்டும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் (CIABOC) முன்னிலையில் அழைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

மேலும், 2026 பெப்ரவரியில் அவன்கார்ட் நிறுவனத்தால் தங்களுக்குச் சாதகமாக தாக்கல் செய்யப்பட்ட சில மேன்முறையீட்டு பேராணை மனுக்கள் (Writ Cases) மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button