இலங்கை

சஜித்தின் அலுவலகத்திற்கு முதன்முறையாக செல்லவுள்ள ரணில்! முக்கிய சந்திப்பில் நாமலும் இணையக்கூடும்…

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும் அரசின் முயற்சி தொடர்பாக எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டை ஒருங்கிணைக்கும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் வியாழக்கிழமை (23) கொழும்பு, சிறிமத் மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் நாமல் ராஜபக்சவும் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற பின்னர், அவரது அலுவலகத்திற்கு ரணில் விக்கிரமசிங்க வருகை தரும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசின் முயற்சிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளின் ஒருமித்த நிலைப்பாட்டை உருவாக்கும் வகையில் இந்தக் கூட்டத்தை நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதுதொடர்பாக நாமல் ராஜபக்ச தனிப்பட்ட முறையிலும் எதிர்க்கட்சித் தலைவரை தொடர்புகொண்டு கலந்துரையாடலை விரைவில் நடத்துமாறு வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

தான் யால பகுதியில் இருப்பதால் எதிர்வரும் 23 ஆம் திகதியை கூட்டத்திற்காக ஒதுக்க முடியும் என சஜித் பிரேமதாச அறிவித்ததைத் தொடர்ந்து, அன்றைய தினம் கலந்துரையாடலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் நாமல் ராஜபக்ச நிச்சயமாக பங்கேற்கவுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொள்ளவுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைத் தவிர, எதிர்க்கட்சியில் உள்ள ஏனைய அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் இக்கலந்துரையாடலில் பங்கேற்பார்கள் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button