இலங்கை

அர்ச்சுனா தொடர்ந்தும் குழப்பம் விளைவிக்கிறார்; உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

“கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் இருப்புத் தொடர்பில் நாம் கூடுதல் கவனம் செலுத்துவோம்; அம்மாவட்டத்தைக் கைவிட மாட்டோம்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் மீண்டும் விரைவில் நடைபெறும்” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் கேடுகெட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதற்கு இன்றைய சம்பவமே மற்றுமொரு சான்றாகும் எனவும் அமைச்சர் கூறினார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் நேற்று ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:

“கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் மிகவும் அமைதியான முறையிலேயே நடைபெற்று வந்தது.

இந்நிலையில், சிவபூசையில் கரடி புகுந்தது போல, ஒரு கரடி புகுந்து பைத்தியக்காரத்தனமாக விளையாடி, குழப்பத்தை விளைவித்துக் கூட்டத்தை இடைநிறுத்தியது.

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தொடர்ச்சியாக எல்லாக் கூட்டங்களுக்கும் சென்று குழப்பம் விளைவித்து வருகின்றார்.அதிகாரிகள் மீது அபாண்டமாகப் பழி சுமத்தி வருகின்றார்.

அபிவிருத்திக் குழுக்கூட்டத்தைப் பயன்படுத்தி அதிகாரிகள் மீது அபாண்டமாகப் பழி சுமத்தக் கூடாது. அவ்வாறு செய்தால், அந்த அதிகாரிகளால் சமூகத்தின் முன் செல்ல முடியாத நிலை ஏற்படும்.

அர்ச்சுனாவின் இத்தகைய கேடுகெட்ட நடவடிக்கைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கு இன்றைய கூட்டமே சாட்சியாகும்.

கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னேற்றம் மற்றும் இருப்புத் தொடர்பில் நாம் அவதானம் செலுத்துவோம். அடுத்து வரும் நாட்களில் மீண்டும் அபிவிருத்திக் குழு கூடும்; அப்போது உறுதியான முடிவு எடுக்கப்படும்” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button