உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணைக்கு பெரும் முட்டுக்கட்டை; சலேயின் மனுவை உடன் நிராகரியுங்கள்; கர்தினால் மல்கம் ரஞ்சித் இடையீட்டு மனுத் தாக்கல்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்கு பெரும் முட்டுக்கட்டை ஏற்படும் வகையிலான அபாயம் இருப்பதாகவும், இதனால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்யுமாறும் கோரி, பேராயர் மெல்கம் ரஞ்சித்தினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இடையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேதேவளை சுரேஷ் சலேவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விடயத்தில் தனது விளக்கத்தை வழங்குவதற்கு அனுமதி வழக்குமாறும் பேராயர் மெல்கம் ரஞ்சித், நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது சட்டத்தரணி ஊடாக பேராயர் இந்த இடையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னை தடுத்து வைத்திருப்பது சட்டத்திற்கு விரோதமானது என்றும், இதனால் தன்னை இதிலிருந்து விடுதலை செய்ய உத்தரவிடுமாறும் சுரேஷ் சலேவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு கடந்த 14ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இன்று வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே பேராயர் மெல்கம் ரஞ்சித்தினால் இந்த இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பேராயரின் இடையீட்டு மனுவில், சுரேஷ் சலேயின் குறித்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், சலே கோரியுள்ள நிவாரணத்தை வழங்குவது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்து வரும் விசாரணைகளின் முன்னேற்றத்தைப் பாதிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
![]()