கிழக்கு மாகாண ஐவர் கொலை வழக்கு: பிள்ளையானுக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியல்!

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் ‘பிள்ளையான்’ எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இந்த விசேட வழக்கு (13) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
பாதுகாப்பு மற்றும் நடைமுறைச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, இன்றைய வழக்கு விசாரணையின் போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் சிறைச்சாலையிலிருந்து இணையவழி தொழில்நுட்பத்தின் ஊடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் T-56 ரக அதிநவீன துப்பாக்கிகளைப் பயன்படுத்தி ஐந்து நபர்கள் கொடூரமான முறையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இது குறித்த தீவிர விசாரணைகளை முன்னெடுத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID), முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட இரு சந்தேகநபர்களுக்கு எதிராக நீதிமன்றில் உத்தியோகபூர்வமாக அறிக்கை தாக்கல் செய்திருந்தது.
இவ்வழக்கின் மேலதிக விசாரணைகள் தொடரவுள்ள நிலையில், சந்தேகநபரின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
![]()