பலாலி போராட்டக் களத்தில் கொட்டகை அமைப்பதற்கு அனுமதி தருமாறு பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு!

பலாலி போராட்டக் களத்தில் கொட்டகை அமைப்பதற்கு அனுமதி தருமாறு பொலிஸாருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில், (13) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இராணுவ வசமுள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி பலாலி உதயகலைவாணி மக்கள் ஒன்றியத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டம் நடைபெறும் இடத்தில் அமர்ந்து போராட்டம் நடாத்துவதற்காக அந்த பகுதியில் கொட்டகை அமைக்க பலாலி பொலிஸாரிடம் அனுமதி கோரியிருந்தனர்.
பலாலி பொலிஸார் அனுமதிக்காத நிலையில், கடுமையான வெயிலில் இருந்து தாம் போராட்டத்தை முன்னெடுப்பதனால் , பாரிய சிரமத்தை எதிர்கொள்வதாகவும், இப்போராட்டத்தில் வயோதிபர்கள், முதியவர்கள் சிறுவர்கள் என பல தரப்பினர் போராட்டத்தில் கலந்து கொள்வதனால் வெய்யிலில் பாரிய களைப்பு சோர்வு போன்ற உபாதைகளை எதிர்க்கொள்ள நேரிடுவதாக சுட்டிக்காட்டி, போராட்டம் நடாத்தும் இடத்தில் கொட்டகை அமைக்க அனுமதி பெற்றுத்தருமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
உரிய தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வை பெற்றுத்ருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
![]()