பங்களாதேஷில் இயற்கையின் கோரத்தாண்டவம் – இதுவரை 51 பேர் உயிரிழப்பு – 10 இலட்சம் பேர் பாதிப்பு!

பங்களாதேஷில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பங்களாதேஷில் பெய்து வரும் கடும் மழையால் நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சிட்டகொங் மாகாணத்தின் ஏழு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் பல இடங்களில் ஏற்பட்ட மண்சரிவுகள் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
பங்களாதேஷ் அரசாங்கத்தின் தகவலின்படி, நாட்டின் 64 மாவட்டங்களில் ஏழு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 10 இலட்சம் மக்கள் இந்த இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழப்புகளில் அதிகபட்சமாக கொக்ஸ் பஜார் மாவட்டத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, சட்டோகிராம் பகுதியில் 13 பேரும், பந்தர்பன் மாவட்டம் பகுதியில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பலர் ரோஹிங்யா அகதிகள் முகாம்களில் தங்கியிருந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர் மழையால் அகதிகள் முகாம்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, அடுத்த சில நாட்களும் கனமழை நீடிக்கும் அபாயம் இருப்பதாக பங்களாதேஷ் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
![]()