சிறிலங்கா சிறைச்சாலை படுகொலைகள்: மறைக்கப்பட்ட இரத்த வரலாற்று தொடர்ச்சி… நவீனன்

சிறைச்சாலை என்பது ஒரு நாட்டின் சட்ட ஆட்சியின் அடையாளமாக இருக்க வேண்டிய இடமாகும். குற்றம் சாட்டப்பட்டவர்களாக இருந்தாலும், தண்டனை பெற்றவர்களாக இருந்தாலும், மனித உரிமைகளும் உயிர் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டிய இடமே சிறைச்சாலை. ஆனால் இலங்கையின் வரலாற்றில் சில சிறைச்சாலைகள் நீதியின் அடையாளங்களாக அல்லாமல், அரசியல் பழிவாங்கல்கள், இனவாத வன்முறைகள், கைதிகளுக்கிடையிலான மோதல்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் தோல்விகளின் சாட்சிகளாக மாறியுள்ளன.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ள அண்மைய வன்முறைச் சம்பவமும் இந்த நீண்டகால வரலாற்றின் மற்றொரு அத்தியாயமாகவே பார்க்கப்படுகிறது. கைதிகளுக்கிடையிலான மோதலில் முப்பது பேர் உயிரிழந்ததாகவும், சிறை பாதுகாவலர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அத்துடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் உடனடி காரணம் பாதாள உலகக் குழுக்களுக்கிடையிலான மோதல், போதைப்பொருள் வியாபார முரண்பாடு அல்லது உள்கட்டமைப்பு பிரச்சினைகள் என கூறப்பட்டாலும், இலங்கையின் சிறைச்சாலை வரலாற்றை ஆராய்ந்தால் இதுபோன்ற வன்முறைகள் தனிப்பட்ட சம்பவங்கள் அல்ல என்பது தெளிவாகிறது.

நீர்கொழும்பு சிறைச்சாலை: ஒரு வரலாற்றுச் சுமை:
நீர்கொழும்பு சிறைச்சாலை அமைந்துள்ள பகுதி காலனித்துவ வரலாற்றுடன் தொடர்புடையது. டச்சு ஆட்சிக்கால கட்டிட அமைப்புகளுக்குள் அமைந்துள்ள இந்த சிறைச்சாலை, நாட்டின் முக்கியமான தடுப்பு நிலையங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் அருகில் இருப்பதால், குடிவரவு சட்ட மீறல்கள், சட்டவிரோத பயண முயற்சிகள், போலி ஆவணங்கள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்படுபவர்கள் பெருமளவில் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர்.
ஒரு காலகட்டத்தில் வெளிநாடுகளுக்கு செல்ல முயன்ற பல தமிழர்கள், குறிப்பாக போர் கால மற்றும் போருக்குப் பிந்தைய சூழலில், முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் இங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். நீதிமன்ற விசாரணைக்காக காத்திருந்த பலருக்கு இந்த சிறைச்சாலை ஒரு இடைக்கால தடுப்பு முகாமாக இருந்தது.
ஆனால் காலப்போக்கில் அதிகமான கைதிகளை குறைந்த வசதிகளுடன் அடைத்து வைக்கும் நிலை உருவானது. சிறைக் கூடத்தை விட பல மடங்கு அதிகமான கைதிகள் அடைக்கப்படுவது, நிர்வாக குறைபாடுகள், போதைப்பொருள் வலையமைப்புகளின் செல்வாக்கு போன்றவை சிறைச்சாலை வன்முறைகளுக்கான சூழலை உருவாக்கின.
வெலிக்கடை வரலாற்றின் இருண்ட பக்கம்:
இலங்கை சிறைச்சாலை வரலாற்றில் மிக மோசமான அத்தியாயங்களில் ஒன்றாக வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைகள் குறிப்பிடப்படுகின்றன.
1983 ஜூலை இன வன்முறைகளின் பின்னணியில் வெலிக்கடை சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இலங்கை இன வரலாற்றில் அழியாத கறையாக உள்ளது.
1983 ஜூலை 25 மற்றும் 27 ஆகிய நாட்களில் வெலிக்கடை சிறைச்சாலைக்குள் இருந்த தமிழ் கைதிகள் மீது சிங்கள கைதிகளின் குழுக்கள் தாக்குதல் நடத்தின. பாதுகாப்பு அமைப்புகள் உரிய முறையில் தலையிடவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன.
இந்த கொடூர தாக்குதல்களில் 53 தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர்.
உயிரிழந்தவர்களில் தமிழ் விடுதலை இயக்கங்களுடன் தொடர்புடைய அரசியல் கைதிகளே இருந்தனர். இந்த சம்பவம் ஒரு சாதாரண சிறை மோதல் அல்ல; இனவாத அரசியல் சூழல் சிறைச்சாலைச் சுவர்களுக்குள் எவ்வாறு பிரதிபலித்தது என்பதற்கான முக்கிய சாட்சியாக அது பார்க்கப்படுகிறது.
1987 ஆம் ஆண்டிலும் வெலிக்கடை சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக மீண்டும் தாக்குதல் நடத்த முயற்சி இடம்பெற்றதாக முன்னாள் கைதிகளும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் பதிவு செய்துள்ளனர். சிறைச்சாலை சுவர்கள் உடைக்கப்பட்டு கைதிகள் மீது தாக்குதல் நடத்தும் அபாயம் ஏற்பட்ட நிலையில், பாதுகாப்புப் படையினர் தலையிட்டு தமிழ் கைதிகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் 1983 படுகொலையின் பின்னரும் சிறைச்சாலை அமைப்பில் இன அடிப்படையிலான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்ந்திருந்ததை வெளிப்படுத்தியது.
2012 வெலிக்கடை கலவரம்
2012 நவம்பர் 9 ஆம் தேதி வெலிக்கடை சிறைச்சாலையில் மீண்டும் ஒரு பெரிய கலவரம் ஏற்பட்டது. சட்டவிரோத ஆயுதங்களை தேடும் சிறப்பு நடவடிக்கையின் போது கைதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட பதற்றம் வன்முறையாக மாறியது.
இந்த சம்பவத்தில் 27 கைதிகள் உயிரிழந்தனர் என்றும், 40 பேர் காயமடைந்தனர் என்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்திற்குப் பின்னர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் முழுமையான அறிக்கை மற்றும் பரிந்துரைகள் பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரியவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன.
இலங்கையின் பல பாதுகாப்பு சம்பவங்களைப் போலவே, சிறைச்சாலை வன்முறைகள் தொடர்பான விசாரணைகளும் பெரும்பாலும் வெளிப்படைத்தன்மை இல்லாமல் முடிவடைவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
மகசின் சிறை- தமிழர்களின் கொலைக்களம்:
வெலிக்கடை சம்பவங்களுக்குப் பின்னர் தமிழ் அரசியல் கைதிகளையும் ஜேவிபி அரசியல் கைதிகளையும் தனியாக வைத்திருக்க மகசின் சிறைச்சாலை பயன்படுத்தப்பட்டது. இங்கு இன மற்றும் அரசியல் பின்னணிகள் வேறுபட்ட கைதிகள் ஒரே சிறை அமைப்புக்குள் வாழ வேண்டிய சூழல் இருந்தது.

1988 டிசம்பர் மாதம் ஜேவிபி அரசியல் கைதிகள் தங்களது சிறைப் பகுதியை வெடிகுண்டு மூலம் உடைத்து தப்பிச் சென்ற சம்பவம் குறிப்பிடத்தக்கது. அப்போது அருகில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளும் வெளியேற அழைக்கப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் வெளியேறவில்லை என்றும் முன்னாள் கைதிகள் கூறியுள்ளனர்.
இது அந்தக் காலகட்ட அரசியல் கைதிகளின் வேறுபட்ட நிலைப்பாடுகளையும், சிறைச்சாலைகளுக்குள் நிலவிய பதற்றமான சூழலையும் காட்டுகிறது.
போகம்பரையில் மலையக தமிழர் சிறை:
கண்டி போகம்பரை சிறைச்சாலையும் இலங்கையின் அரசியல் கைதிகள் வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுள்ளது. 1987 காலப்பகுதியில் மலையகத் தமிழ் அரசியல் கைதிகள் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் அபாயம் ஏற்பட்டபோது, அவர்களை பாதுகாப்பான முறையில் மகசின் சிறைச்சாலைக்கு மாற்றியதன் மூலம் ஒரு பெரிய மோதல் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது சிறைச்சாலைகளில் கைதிகளின் பாதுகாப்பு என்பது நிர்வாக பிரச்சினை மட்டுமல்ல; அரசியல் மற்றும் இன உறவுகளுடனும் தொடர்புடையது என்பதை காட்டுகிறது. சிறிலங்கா சிறைகளில் தொடரும் பிரச்சினைகள் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
இலங்கையின் சிறைச்சாலை வன்முறைகளை ஆய்வு செய்தால் சில பொதுவான காரணங்கள் மீண்டும் மீண்டும் தோன்றுகின்றன.
பிந்துனுவேவா தடுப்பு முகாம் படுகொலை:
இலங்கை மத்திய மாகாணத்தின் பண்டாரவளை அருகிலுள்ள பிந்துனுவேவா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், நாட்டின் சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பு குறித்த கடுமையான கேள்விகளை எழுப்பியது. பிந்துனுவேவா தடுப்பு முகாமில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த அப்பாவி தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
2000 ஆம் ஆண்டு அக்டோபர் 25 அன்று, பிந்துனுவேவா கிராமத்தைச் சேர்ந்ததாகக் கூறப்படும் நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் ஆயுதங்களுடன் தடுப்பு முகாமுக்குள் நுழைந்து கைதிகள் மீது தாக்குதல் நடத்தினர். கற்கள், பொல்லுகள், கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பலர் கடுமையாகக் காயமடைந்தனர். 27 தமிழ் கைதிகள் உயிரிழந்தனர்; பலர் படுகாயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் ஒரு தனிப்பட்ட வன்முறைச் சம்பவமாக மட்டுமல்லாமல், இலங்கையின் நீண்டகால இனமோதலின் பின்னணியில் சிறுபான்மை கைதிகளின் பாதுகாப்பு, சட்டத்தின் ஆட்சி மற்றும் அரச நிறுவனங்களின் பொறுப்பு ஆகியவற்றைச் சுற்றிய விவாதங்களையும் உருவாக்கியது.

சிறைப் படுகொலைகளுக்கை முக்கிய காரணமாக சிறைக் கொள்ளளவை மீறும் கைதிகள் எண்ணிக்கை, போதிய கண்காணிப்பு இல்லாமை, ஊழல் மற்றும் சட்டவிரோத வலையமைப்புகள், அரசியல் கைதிகளின் பாதுகாப்பின்மை, இன மற்றும் அரசியல் பதற்றங்களின் தாக்கம், வெளிப்படையான விசாரணைகள் இல்லாமை ஆகிய பல்வேறு நிலமைகளால் சிறைகளில் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.
ஆயினும் அரசால் சிறைச்சாலை கலவரங்கள் இடம்பெறும் ஒவ்வொரு முறையும் உடனடி காரணங்கள் மட்டும் பேசப்படுகின்றன. ஆனால் அதன் பின்னால் உள்ள கட்டமைப்பு குறைபாடுகள் குறித்து போதுமான கவனம் செலுத்தப்படுவதில்லை.
நீர்கொழும்பு சிறைச்சாலை மரணங்கள் இலங்கைக்கு புதிய சம்பவம் அல்ல. அது பல தசாப்தங்களாக தொடரும் ஒரு ஆழமான பிரச்சினையின் புதிய வெளிப்பாடாகும். வெலிக்கடை 1983 படுகொலைகள், 1987 தாக்குதல் முயற்சிகள், 2012 கலவரம், மகசின் மற்றும் போகம்பரை சிறைச்சாலை சம்பவங்கள் என இலங்கையின் சிறைச்சாலை வரலாறு பல இருண்ட பக்கங்களை கொண்டுள்ளது.
ஒரு ஜனநாயக நாட்டின் வலிமை அதன் சிறைச்சாலைகளில் கூட மனித உரிமைகளை எவ்வாறு பாதுகாக்கிறது என்பதிலேயே அளவிடப்படுகிறது. கைதிகள் குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்கள் உயிரிழக்க வேண்டியவர்கள் அல்ல. சட்டத்தின் பாதுகாப்புக்குள் இருக்க வேண்டிய இடமே சிறைச்சாலை. ஆனால் இலங்கையின் அனுபவம் காட்டுவது என்னவென்றால், சிறைச்சாலைச் சுவர்களுக்குள் நடந்த பல மரணங்கள் இன்னும் முழுமையான உண்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்காக காத்திருக்கின்றன என்பதே.
![]()