116 வயதிலும் திருப்பதி மலையேறிய மூதாட்டி

திருப்பதி ஏழுமலையானை 116 வயதிலும் படியேறி தரிசித்த மூதாட்டிக்கு விஐபி தரிசன ஏற்பாடு செய்து தேவஸ்தானம் கவுரவித்துள்ளது.
படியேறி ஏழுமலையானை தரிசித்த மூதாட்டி
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 116 வயதான நவநீதம்மாள், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அலிபிரி மலைப்பாதை வழியாக 3,550 படிகள் ஏறிச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
குடும்பத்தினருடன் திருப்பதிக்கு வந்த அவர், வாகனத்தில் செல்லாமல் படிகள் வழியாகவே ஏறி ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்று உறுதியாக கூறியுள்ளார்.
இதையடுத்து குடும்பத்தினரும் அவருடன் படியேறிச் சென்றனர்.
இந்நிலையில், 116 வயதிலும் அவர் படிகள் ஏறிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
கவுரவித்த தேவஸ்தானம்
இதைத் தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர். நாயுடு தனது எக்ஸ் பதிவில், அம்மூதாட்டியை பாராட்டினார்.
மேலும், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சிறப்பு தரிசனம் வழங்க முடிவு செய்ததாக தெரிவித்தார்.
பின்னர் இன்று காலை நவநீதம்மாள் அவர்களை விஐபி பிரேக் தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தனர்.
இதனைதொடர்ந்து, நவநீதம்மாளுக்கு பட்டு சால்வை அணிவித்து தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.
![]()