8 நாட்களுக்குப் பின் இடிபாடுகளுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட நபர்!

வெனிசுலாவை உலுக்கிய சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் ஏற்பட்டு 8 நாட்கள் கடந்துள்ள நிலையில், ஒன்பது மாடி கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த நபர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
இந்த நபர், லா குவைரா பகுதியில் உள்ள வணிக வளாக வாகன நிறுத்தத்தின் 29 அடி ஆழ இடிபாடுகளுக்குள் புதையுண்டிருந்தார்.
உள்ளூர் மற்றும் சர்வதேச மீட்புக் குழுவினர் இணைந்து பல நாட்கள் மேற்கொண்ட மிக நுணுக்கமான மற்றும் ஆபத்தான தேடுதல் நடவடிக்கையின் பின்னர் அவர் வெற்றிகரமாக வெளியே கொண்டுவரப்பட்டார்.

அவரைக் மீட்பதற்கு மட்டும் தொடர்ந்து 70 மணித்தியாலங்கள் தீவிரமாகப் போராட வேண்டியிருந்ததாக சிலி நாட்டின் தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட ஹெர்னான் கில், தற்போது நல்ல உடல் நிலையில் உள்ளதாக மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அம்புலன்சில் அவரை ஏற்றிய போது அவர் முற்றிலும் சீரான உடல்நிலையுடன் இருந்தார். பயணம் முழுவதும் அவர் முழு விழிப்புணர்வுடனும், நிதானத்துடனும், மீட்புக் குழுவினருக்கு ஒத்துழைப்பு வழங்கிய வண்ணமும் இருந்தார்.
அவரது உடலின் முக்கிய இயக்கக் குறிகாட்டிகள் அனைத்தும் இயல்பாகக் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்திற்குப் பின் அவர் இறந்துவிட்டதாகக் கருதி மிகுந்த சோகத்தில் நாட்களைக் கழித்தேன்.
ஆனால் அவர் உயிருடன் இருக்கிறார் என்று தெரிந்ததும் என் வாழ்வில் பெரும் ஒளி பிறந்தது என கில்லின் மனைவி குஸ்விமார் கோன்சலஸ் தெரிவித்துள்ளார். அவர் ஒரு ஹீரோவைப் போலத் தாக்குப்பிடித்துள்ளார்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வணிக வளாக இடிபாடுகளுக்குள் மனித நடமாட்டம் இருப்பதை கோஸ்டாரிகா செஞ்சிலுவைச் சங்கம் முதலில் கண்டறிந்தது. சோனார் ரேடார் மற்றும் ஒலி கண்டறியும் கருவிகள் மூலம் நபர் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
புதன்கிழமை அன்று இடிபாடுகளுக்குள் செலுத்தப்பட்ட தேடல் கேமரா மூலம் கில்லின் விரல்கள் அசைவது கண்டறியப்பட்டது.
மீட்புக் குழுவினர் ஒரு குழாய் மற்றும் ஊசி மூலம் இடிபாடுகளுக்குள் இருந்த கில்லிற்கு தண்ணீர், உணவு மற்றும் எலக்ட்ரோலைட் திரவங்களை வழங்கி, அவருடன் தொடர்ந்து உரையாடி வந்தனர்.
“பாறைகள் அழுத்துவதால் அசௌகரியமாக உள்ளது, மற்றபடி காயங்கள் எதுவும் இல்லை” என கில் மீட்பாளர்களிடம் பேசியுள்ளார். வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் இந்த மீட்புப் பணியைப் பாராட்டியுள்ளார்.
இந்த இரட்டை நிலநடுக்கம் காரணமாக இதுவரை குறைந்தது 2,295 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், உண்மையான மரணங்களின் எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
![]()