இந்தியா

தவெக ஆட்சி கவிழ்ப்பு சதி வழக்கு!

தவெக ஆட்சிக் கவிழ்ப்புக்கு வழிவகுக்க, அக்கட்சியின் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி உறுப்பினரான இளையராஜாவிடம் பேரம் பேசியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக திருவல்லிக்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பொலிஸார் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

தமிழக வெற்றிக் கழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி உறுப்பினரான என்.இளையராஜா அவர்களை சில தினங்களுக்கு முன்பு தொலைபேசியில் தொடர்பு கொண்ட திருநாவுக்கரசு என்ற நபர், தான் Indian Political Democratic Strategies (IPDS) என்ற கருத்து கணிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதாகவும்,

ஒரு முக்கிய கட்சியை சேர்ந்த சிலர் கேட்டுக் கொண்டதன் பேரில் தொடர்பு கொள்வதாகவும், நேரில் சந்திக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார். ஆனால், தான் வேறு பணியில் இருப்பதாகக் கூறி இளையராஜா தொடர்பை துண்டித்துள்ளார்.

ஆனால், மீண்டும் தொடர்பு கொண்ட திருநாவுக்கரசு, இளையராஜாவிடம், தமிழ்நாடு சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர உள்ளதாகவும், ஆளுங்கட்சி உறுப்பினராக இருந்தாலும் அத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது தாங்கள் எதிராக நடந்துகொள்ள வேண்டும் என்றும், அதற்கு சன்மானமாக 35 கோடி ரூபா வரை தருவதாகவும் ஆசை வார்த்தை காட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளையராஜா, எனக்கு விருப்பமில்லை. இனிமேல் என்னிடம் பேசாதீர்கள் என்று கண்டிப்புடன் கூறியபோது. தான் பேசியது குறித்து வெளியே தெரிவித்தால் இளையராஜாவும் அவரது குடும்பத்தினரும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று திருநாவுக்கரசு மிரட்டியுள்ளார்.

இதனால் சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா கடந்த 29 ஆம் திகதி சென்னை பெருநகர பொலிஸ் ஆணையரிடம் அளித்த புகாரில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது ஊழியரான தன்னிடம் தனது மக்கள் பணியை செய்யக் கூடாது என்பதற்காகவும், தனது பேச்சுக்கு உடன்பட லஞ்சம் தர முயற்சித்ததோடு. தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் திருநாவுக்கரசு மற்றும் அவருக்கு பின்புலமாக செயல்படும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.

அப்புகாரின்பேரில், D1 திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. புலன் விசாரணையின் அடிப்படையில் சம்பவத்தில் ஈடுபட்ட சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு மற்றும் அவருக்கு பின்னணியாகச் செயல்பட்ட திருச்சியை சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் புலன் விசாரணையில் திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் என்பவர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட நரேஷை சென்னையில் சந்தித்ததும், செந்தில்பாலாஜி மற்றும் அசோக்குமார் ஆகியோரின் அறிவுரையின் பேரிலேயே திருநாவுக்கரசு வழக்கின் புகார்தாரரான சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவை தொடர்பு கொண்டு இது போன்ற செயல்களில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.

மேலும் இவ்வழக்கில் பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மூவரையும் 15 ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button