இந்தியா

எம்.எல்.ஏ. பதவியை இராஜினாமா செய்தார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் அதிமுக எம்.எல்.ஏ. எம்.ஆர்.விஜயபாஸ்கர்   (29) தன்னுடைய எம்.எல்.ஏ. பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை ஆகிய 6 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெற உள்ள 6 தொகுதிகளில் திருச்சி கிழக்கு தொகுதியை தவிர்த்து, ஏனைய 5 தொகுதிகளிலும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் இராஜினாமா செய்ததால் காலியானது.

இந்த நிலையில் மேலும் ஒரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். கரூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்து, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து தனது எம்.எல்.ஏ. பதவியை இராஜினாமா செய்தார். இவரும் த.வெ.க.வில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.

அ.தி.மு.க.வில் இருந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெளியேறியதன் மூலம் சட்டசபையில் அக்கட்சி எம்.எல்.ஏ.க்களின் பலம் 47 இல் இருந்து 41 ஆக குறைந்துள்ளது. இப்படி, ஒவ்வொரு எம்.எல்.ஏ.வாக அ.தி.மு.க.வை விட்டு வெளியேறுவது, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மட்டுமின்றி, அ.தி.மு.க.வினரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இதனையடுத்து எம்.ஆர். விஜயபாஸ்கரின் இராஜினாமாவை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சட்டமன்றப் பேரவை விதி 21 இன் படி கரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவி விலகல் கடிதத்தை தம் கைப்பட எழுதி என்னிடம் அளித்துள்ளார். அவர் அளித்த பதவி விலகல் கடிதம் சட்டமன்றப் பேரவை விதி 22 இன் படி முறையாக உள்ளதால் அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.ஆர்.விஜயபாஸ்கரின் இராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து கரூர் தொகுதியும் காலியானதாக விரைவில் அறிவிக்கப்படும். இதன்மூலம் தமிழகத்தில் காலியான தொகுதிகளின் எண்ணிக்கையும் 7 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் கரூர் தொகுதியும் சேர்க்கப்படும் என கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் தேர்தலுக்குப் பிறகு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை இராஜினாமா செய்து வருவது அந்தந்த தொகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button