கவிதைகள்
சுவாமி அறையில் பூசை… கவிதை… முல்லைஅமுதன்

காலையில்-
தேநீருடன் சொற்களையும் தந்துசென்றாள்.
மெல்ல எழுந்துசென்று கழுவியும்
சொற்களைக் கழுவமுடியவில்லை.
நேற்றும்-
வழியில் சந்தித்த நண்பனும்
சொற்களை விதைத்துச் சென்றான்.
கனவில் வந்த புத்தனும் சொற்களை பரப்பிவைத்திருந்தான்.
எப்போதும் சொற்கள் விற்பனக்காகவல்ல..என நம்புபவன் நான்.
சுவாமி அறையில் பூசைப் பொருட்களுடன்
வண்ணத்துப்பூச்சி ஒன்று இறந்து கிடந்தது.
சொற்களைத் தின்றததால் இறந்திருக்கலாம் என்றாள் அம்மா..
சொற்கள் வலிமை மிகுந்தவையா?
அம்மாவின் சொற்களே அக்காவும் தன்னை முடித்துக்கொண்டிருப்பாள்.
சொற்கள் சிலசமயம் எரிக்கும்.
என்னிடமிருந்த சொற்களை இறந்துவிடாமல்
பாதுகாத்து வைத்திருக்கிறேன்.
மாலை வருபவளிடம் கொடுக்கவேண்டும்…
அதற்குள்
குருதி சொட்டச் சொட்ட
சொற்களை கையில் கொண்டுவந்திருந்தான் மகன்.
![]()