இலங்கை

தமிழர் இருப்புக்கு தொடரும் சவால்கள் – அருட்தந்தை மா. சத்திவேல் கருத்து

சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா. சத்திவேல், இலங்கையில் ஆயுதப் போரின் பின்னரும் தமிழர் இருப்புக்கான சவால்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் பல்வேறு அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளை சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் குறிப்பிட்டதாவது, 1948 சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதம் அரச கட்டமைப்பின் ஆதரவுடன் பல தசாப்தங்களாக செயல்பட்டு வருவதாகவும், இதன் பாதிப்புகள் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக தமிழர்கள் மீது தொடர்ந்து காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

வடக்கு–கிழக்கு பகுதிகளிலும், மலையகத்திலும் நில ஆக்கிரமிப்பு, குடியேற்ற நடவடிக்கைகள், பௌத்த சின்னங்கள் அமைத்தல் உள்ளிட்ட காரணங்களால் தமிழர் தாயகப் பரப்புகள் குறைக்கப்படுகின்றன என்றும், இதன் மூலம் மக்கள் சுயமாக இடம்பெயர்க்கப்படுகின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், தமிழர் தாயகத்தில் காணிகள் படையினரும் அரச துறைகளும் வசப்படுத்தி வருவதாகவும், மலையகத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் நில உரிமை இழந்து தொடர்ந்தும் சிக்கல்களை சந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பெருந்தோட்ட அமைச்சர் 500 தேயிலை கிராமங்களை உருவாக்கும் அறிவிப்பை வெளியிட்டிருந்ததை சுட்டிக்காட்டிய அவர், நீண்ட கால அனுபவம் கொண்ட தொழிலாளர்கள் உரிமையற்ற நிலையில் இருக்கும் போது இத்தகைய திட்டங்களின் நியாயம் கேள்விக்குறியாக இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.

மேலும், சர்வதேச மன்னிப்பு சபையின் அண்மைய அறிக்கையில் மலையக தொழிலாளர்கள் கொத்தடிமை நிலைக்கு ஒத்த நிலையில் உள்ளனர் என கூறப்பட்டுள்ளதை அவர் குறிப்பிட, அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, வடக்கு–கிழக்கு மற்றும் மலையக தமிழ் பிரதிநிதிகள் அரசியல் ரீதியாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய கால கட்டாயம் உருவாகியுள்ளது என்றும், கூட்டு முயற்சியினால் மட்டுமே அரசியல் இலக்குகளை அடைய முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button