பலாலியில் இராணுவம் கையகப்படுத்திய காணிகளை விடுவிக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் – பலாலியில் இராணுவம் கையகப்படுத்தி வைத்திருக்கும் காணிகளை மீள ஒப்படைக்கக் கோரி, பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பலாலி உதயகலைவாணி மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டம், காலை 8.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை முன்னெடுக்கப்பட்டது.
தங்களது பூர்வீக நிலங்களை இழந்து 36 ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்ட போராட்டக்காரர்கள், விரைவில் காணிகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
“எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்”, “அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்”, “எங்கள் நிலங்களை விடமாட்டோம்”, “நிலமே எங்கள் மூச்சு; அது இல்லையேல் வாழ்வு போச்சு”, “அரசே, இராணுவத்தை வெளியேற்று; மக்கள் குடியேற வழிவகை செய்” போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பொதுமக்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
![]()