இந்தியா

திமுக அரசின் 46 திட்டங்களை இரத்து செய்த விஜய் அரசு!

தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அறிவிக்கப்பட்டு, இன்னும் தொடங்கப்படாமல் இருந்த 245.85 கோடி ரூபா மதிப்பிலான 46 கட்டுமானப் பணிகளுக்கான நிர்வாக ஒப்புதல்களை முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு தற்போது இரத்து செய்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வென்று, பிற கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. இந்த நிலையில், கடந்த திமுக ஆட்சியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அறிவிக்கப்பட்டு, இன்னும் தொடங்கப்படாமல் இருந்த 245.85 கோடி ரூபா மதிப்பிலான 46 கட்டுமானப் பணிகளுக்கான நிர்வாக ஒப்புதல்கள் தற்போதைய தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 115.77 கோடி ரூபா மதிப்பிலான 29 திருமண மண்டப கட்டுமானத் திட்டங்களுக்கும், 130.08 கோடி ரூபா மதிப்பிலான 17 வணிக வளாகத் திட்டங்களுக்கும் வழங்கப்பட்டிருந்த நிர்வாக அனுமதி இரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மற்றும் கோயில் நிதிகள் அனைத்தும், வணிக நோக்கங்களுக்காக அல்லாமல் முழுக்க முழுக்க கோயில் பராமரிப்பு மற்றும் ஆன்மிகப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கொள்கை முடிவின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும், எதிலும் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை. மேலும், ஒப்புதல்களைத் திரும்பப் பெறுவதற்கான முதன்மைக் காரணங்களாக நீதிமன்றத் தடை உத்தரவுகளையும், கோயில்கள் மீதான நிதிச் சுமையையும் அத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரத்தில், இந்த இரத்து நடவடிக்கையின் மூலம் மிச்சப்படுத்தப்படும் நிதியைக் கொண்டு, கோயில்களின் தூய்மை, திருப்பணிகள் மற்றும் பக்தர்கள் நேரடியாகப் பயன்பெறும் வகையிலான புதிய ஆன்மிகத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button