உலகம்

ஈரானிய எண்ணெய் விற்பனைக்கு அமெரிக்கா தற்காலிக அனுமதி!

ஈரானிய எண்ணெயை விற்பனை செய்வதற்கு தற்காலிகமாக அனுமதிக்கும் வகையில், அமெரிக்க திறைசேரி திணைக்களம் (US Treasury Department) இன்று நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அந்தப் பொருள் மீது பொதுவாக விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை நீக்கும் 60 நாட்களுக்கான “பொது உரிமம்” (General License) ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

“சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளுக்கு இணங்க, ஹோர்முஸ் நீரணையில் சுதந்திரமான மற்றும் திறந்த போக்குவரத்துக்கும், சர்வதேச அணுசக்தி முகமை ஆய்வாளர்களைத் தங்கள் நாட்டிற்குள் அனுமதிப்பதற்கும் ஈரான் உறுதியளித்துள்ளது” என்று திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசென்ட் (Scott Bessent) X தளத்தில் பதிவொன்றையிட்டு தெரிவித்துள்ளார்.

“இந்தக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக, ஈரானிய எண்ணெயின் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனைக்கு அங்கீகாரம் அளிக்கும் தற்காலிக 60 நாள் பொது உரிமத்தை திறைசேரி வெளியிட்டுள்ளது” என்று பெசென்ட் கூறியுள்ளார்.

இந்நடவடிக்கை ஆச்சரியமளிக்கும் ஒன்றல்ல — கடந்த வாரம் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் வெளியிடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், ஈரானிய எண்ணெய் ஏற்றுமதி மீதான தடைகளுக்கு அமெரிக்கா உடனடியாக விலக்கு அளிக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது ஒரு பெரிய போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும், மேலும் இது எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய முனையமாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதையும் உள்ளடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நீரிணை தற்போது திறக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் கூறியுள்ள போதிலும், வார இறுதியில் ஈரானிய இராணுவம் இந்த நீரிணையை மீண்டும் மூடுவதாகத் தெரிவித்தது.

இந்தத் தடைகள் விலக்கு, ஈரானின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஈரான் விற்கக்கூடிய பீப்பாய்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், அந்தப் பீப்பாய்களுக்கு அதிக விலையைப் பெற்றுக்கொள்வதற்கும் சாத்தியத்தை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button