இலங்கை

சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கையின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக, உத்தியோகபூர்வ அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து நிதி மோசடி புரிந்த ஊழல் குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால்   கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முறைப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த விசேட குற்றப்பத்திரிகையில் ஏனைய பிரதிவாதிகளாகச் சேபாலிகா சமன்குமாரி மற்றும் கீர்த்தி பண்டார கொடகம ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கின் பிரதிவாதிகள் மூவருக்கும் எதிராக ஒட்டுமொத்தமாக 10 கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இக்குற்றச்சாட்டுகளை நீதிமன்றில் நிரூபிப்பதற்காக 30 பேர் சாட்சிகளாகப் பட்டியலிடப்பட்டுள்ளதுடன், 38 முக்கிய ஆவணங்கள் வழக்குப்பொருட்களாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான செவனகல, கிரியிப்பென்பெவ பகுதியில் அமைந்துள்ள காணியொன்றில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கட்டிடம் உள்ளிட்ட சொத்துக்கள், கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட மக்கள் போராட்டங்களின் போது சேதமடைந்திருந்தன.

சட்டவிரோதக் கட்டுமானம் என்பதால், அச்சொத்துக்களுக்கு அரசாங்கத்தினால் இழப்பீடு வழங்குவது உத்தியோகபூர்வமாக நிராகரிக்கப்பட்டிருந்தது.

இழப்பீடு நிராகரிக்கப்பட்டிருந்த பின்னணியில், அதற்கு முற்றிலும் முரணான வகையில், இழப்பீட்டுக்கான அலுவலகத்தில் பணியாற்றிய சில அரச அதிகாரிகளுக்குத் தங்களது உத்தியோகபூர்வ அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்திப் பிரதிவாதிகள் கடுமையான அழுத்தம் கொடுத்துள்ளனர்.
இதன் மூலம், சட்டவிரோதமாக 8,850,000/- ரூபா பொதுப்பணத்தை இழப்பீடாகப் பெற்றுக்கொண்டதன் ஊடாக ஊழல் குற்றத்தைப் புரிந்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய காரணங்களுக்காகவே பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இக்குற்றச்சாட்டுகள் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளன.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவுக்கு எதிராக மேல் நீதிமன்றில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த ஊழல் வழக்கு, அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button