உலகம்

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஆக்கிரமிப்பு மத வழிபாட்டு தளங்கள் இடித்து அழிப்பு!

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் கோவில்கள், மசூதி உள்ளிட்ட சில மத வழிபாட்டு தலங்கள் இடிக்கப்பட்டதை அடுத்து அங்கு 3,000 பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரின் ஜகத்புரா பகுதியில் உள்ள நந்த்புரி சுரங்கப்பாதையை 80 அடி சாலையாக அகலப்படுத்தும் பணி இடம்பெற்றுவருகிறது.

இதையொட்டி, சில நாட்களுக்கு முன் அப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 134 கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன.

மேலும் அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு மதவழிபாட்டு தலங்களை அகற்ற காலஅவகாசம் வழங்கப்பட்டது.

காலக்கெடு முடிந்த நிலையில், விரிவாக்க பணி நடக்கும் பகுதியில் உள்ள மசூதி, இரு கோவில்கள், ஆன்மிக கூட்ட அரங்கம், தர்கா போன்றவற்றை ஜெய்ப்பூர் மேம்பாட்டு ஆணையம் நேற்று இடித்து தள்ளியது.

இதையொட்டி அசம்பாவிதங்களை தவிர்க்க, 3,000 பொலிஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று அதிகாலை 12:00 மணி முதல் இன்று நள்ளிரவு வரை, இணையதள சேவை, ‘மொபைல் போன்’ குறுஞ்செய்தி சேவை உள்ளிட்டவை முடக்கப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்கள், பிற டிஜிட்டல் தளங்கள் மூலம் வகுப்புவாத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்தாலோ, வெறுப்புணர்வைத் துாண்டினாலோ, புரளியை பரப்பினாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெய்ப்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button