நாட்டின் நிலமை நல்லதாக இல்லை ரூபாவின் வீழ்ச்சியை அரசால் கட்டுப்படுத்த முடியாத நிலை!; மோசமான நிலைக்குள் நாடு தள்ளப்படுகிறது

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை அரசாங்கத்தினால் முகாமைத்துவம் செய்ய முடியுமென்ற நம்பிக்கை இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றது என்றும், தற்போதைய நிலைமையில் பொருளாதார ரீதியில் நாடு மோசமான நிலைக்கு தள்ளப்படலாம் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலவரம் தொடர்பில் வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டின் நிலமை அவ்வளவுக்கு நல்லதாக இல்லை. டொலரின் பெறுமதி 340 ரூபாவாக தற்போது காணப்படுகின்றது. கறுப்புச் சந்தையில் அது 345 ரூபாவுக்கும் அதிகமாக இருக்கின்றது. அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை படிப்படியாக வீழ்ச்சியடைகின்றது என்பதனையே இது எடுத்துக்காட்டுகின்றது. நம்பிக்கையின் அடிப்படையிலேயே வர்த்தக சந்தை கட்டியெழுப்பப்படுகின்றது. நம்பிக்கை வீழ்ச்சியடைந்தால் வர்த்தக சந்தையும் வீழ்ச்சியடையும்.
இதேவேளை ஒரு வீதத்தால் வட்டி விகிதத்தை உயர்த்தி அன்று நிலைமையை சீர் செய்துகொண்டாலும் மீண்டும் அது வீழ்ச்சியடைய ஆரம்பித்துள்ளது. இதில் பல்வேறு விடயங்கள் தாக்கம் செலுத்துகின்றன. அதாவது குறுகிய கால கடன் பத்திரங்களுக்கு செலுத்த வேண்டும். வங்கிகளுக்கு வரும் வாரங்களில் கடன் பத்திரங்கள் மேலும் வரும். இதற்கான டொலர் வங்கியிடம் இருக்க வேண்டும். அத்துடன் ரூபா இன்னும் வீழ்ச்சியடையும் என்ற நம்பிக்கையில் வெளிநாட்டு நாணயங்களை அனுப்பாமல் இருக்கின்றனர். ஏற்றுமதியாளர்களும் அவ்வாறுதான் ஏற்றுமதி வருமானத்தை கொண்டுவராமல் இருக்கின்றனர்.
இந்நிலையில் அரசாங்கத்திற்கு ரூபாவின் பெறுமதியை முகாமைத்துவம் செய்ய முடியுமென்ற நம்பிக்கை இப்போது பெருமளவில் இல்லாமல் போயுள்ளது.
போகும் நிலைமையை பார்த்தால் கொஞ்சம் மோசமாகவே உள்ளது. நம்பிக்கையிலேயே வர்த்தக சந்தை தங்கியுள்ளது. டிரம்ப் அறிவித்துள்ள புதிய வரியால் மேலும் இலங்கைக்கு நெருக்கடிக்குள் செல்ல வேண்டியுள்ளது. இப்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஜனாதிபதிக்கு நான் புதிதாக கூறத் தேவையில்லை. அவரின் பொருளாதார நிபுணர்கள் கூறுவர். அதன்படி அவர் செயற்பட வேண்டும் என்றார்.
![]()