இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே அலர்ட் ஆகணும்!

ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதற்கு தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்க மாடர்னா உள்ளிட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு 570 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
காங்கோ நாட்டில் தீவிரமடையும் எபோலா வைரஸ் காரணமாக இதுவரை 344 பேருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு அதில் 80 பேர் உயிரிழந்தனர். ஆயிரம் பேருக்குத் தொற்று பாதிப்பு இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் எபோலா நோய் பாதிப்புகள் தற்போது வரை எதுவும் பதிவாகவில்லை என்பதை இந்திய மத்திய சுகாதாரத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
இருப்பினும், கடந்த 21 நாட்களில் எபோலா பாதிப்புள்ள நாட்டிலிருந்து பயணம் செய்திருந்தாலோ அல்லது அதன் வழியாகப் பயணித்திருந்தாலோ, உங்களுக்குக் காய்ச்சல், தலைவலி, தசை வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, அல்லது காரணமின்றி ஏற்படும் ரத்தப்போக்கு போன்ற அறிகுறிகள் தோன்றினால், உங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும் என இந்திய மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.
எபோலா வைரஸ் தொற்று பாதிப்புகளை முன்கூட்டியே தெரிவிப்பது உயிர்களைக் காப்பாற்றவும், நோய் பரவுவதைத் தடுக்கவும் உதவும் எனவும் இந்திய மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
![]()