இலங்கை

பொய் உரைக்கும் அரசுக்கு சஜித் மட்டுமே மாற்று வழி- சமிந்த விஜேசிறி எம்.பி. சுட்டிக்காட்டு!

எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது என்று உறுதியளித்திருந்தபோதிலும், புனித வெசாக் பௌர்ணமி தினத்தன்று மக்கள் வழிபாடுகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய நள்ளிரவில் டீசல் மற்றும் பெற்றோல் விலைகள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குற்றம் சாட்டியுள்ளார்.

அரசின் இத்தகைய பொய் உரைக்கும் அரசியலை மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர் என்றும், எப்போதும் உண்மையை மட்டும் பேசி நாட்டைப் பொருளாதாரச் சீரழிவிலிருந்து மீட்கக்கூடிய ஒரே தலைவர் சஜித் பிரேமதாஸ மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

“தரம் குறைந்த நிலக்கரியை நாட்டுக்கு இறக்குமதி செய்ததன் மூலம் தற்போதைய அரசாங்கம் மிகப் பெரிய ஊழலைச் செய்துள்ளது. இந்த முறைகேட்டைத் தணிக்கைத் திணைக்களமும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இதனால் ஏற்பட்டுள்ள நட்டத்தை மறைக்கவே, நாட்டு மக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்காமல் திடீர் தொழில்நுட்பக் கோளாறு என்ற பெயரில் நாளொன்றுக்கு 3 முதல் 4 மணித்தியாலங்கள் மறைமுக மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

எதிர்க்கட்சியில் இருந்தபோது வரிக்குறைப்பு மற்றும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றிப் பேசிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, இன்று ஆட்சியைப் பிடித்த பிறகு மக்களைத் திட்டமிட்டு ஏமாற்றி வருகின்றது. திறைசேரி நிரம்பியுள்ளதாக ஜனாதிபதி கூறுவது உண்மை எனின், ஏன் மக்களுக்கு மின்சாரம் மற்றும் எரிபொருள்களுக்கான நிவாரணங்களை வழங்கக் கூடாது? இவர்களின் செயல் மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடித்து சர்வதேசத் திருடர்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ளதோ என்ற பலத்த சந்தேகத்தையே எழுப்பியுள்ளது.

குறிப்பாக, உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிக்காத நிலையிலும், இலங்கையில் மட்டும் இந்த விலை உயர்வு மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. தற்போதைய அரசின் இத்தகைய பொய் உரைக்கும் அரசியலையும் ஊடக அடக்குமுறைகளையும் மக்கள் இன்று நன்கு உணர்ந்துள்ளனர்.

தற்போது அரசுக்குள் இருக்கும் சிலரே இவர்களின் ஏமாற்று மற்றும் பொய் வேலைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். அதனாலேயே கட்சி மாறுபவர்களுக்கும், தமக்கு எதிராகச் செயற்படுபவர்களுக்கும் எதிராகக் கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்து, அவர்களின் வாயை மூட அரசு முயற்சிக்கின்றது. கடந்த காலங்களில் ஊடகங்களை ஒடுக்கவும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன.

அரசின் மீதான மக்கள் ஆதரவு முற்றாகச் சரிந்துவிட்டதை உணர்ந்துகொண்டதன் காரணமாகவே, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு அஞ்சி அதனைத் தள்ளிப்போட்டு வருகின்றது.

கடந்த காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோது எமது தலைவர் சஜித் பிரேமதாஸ, நாட்டின் கல்வி முறையை நவீனமயமாக்குவதற்காகப் பாடசாலைகளுக்கு ‘ஸ்மார்ட் போர்டுகளை’ வழங்கியபோது இவர்களே கிண்டலடித்தார்கள். ஆனால் இன்று மேடைகளில் பொய் உரைப்பதைத் தவிர, இந்த அரசுக்கு நாட்டை வழிநடத்த எவ்வித பொருளாதார அறிவோ அல்லது நிபுணத்துவமோ இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஊழல்வாதிகளுடன் கைகோர்க்காமல் எப்போதும் உண்மையை மட்டும் பேசி, நாட்டை இந்த ஆழமான பொருளாதாரச் சீரழிவிலிருந்து மீட்கக்கூடிய ஒரே தலைவர் சஜித் பிரேமதாஸ மாத்திரமே.” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button