இந்தியா

சென்னையில் இலங்கை பெண் கொலை வழக்கில், மற்றொரு சிறுமியும் பலி

சென்னை கோயம்பேட்டில் காரில் மோதி இலங்கை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காயமடைந்த சிறுமியும் உயிரிழந்தார்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 17 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த 18 வயதான யான்சி என்ற இளம்பெண், இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், தோழியை பார்ப்பதற்காக சென்னை சென்ற யான்சி, இரவில் கோயம்பேட்டில் உள்ள கேளிக்கை விடுதிக்கு சென்ற நிலையில் அங்கு மற்றொரு தரப்பினருடன் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இருதரப்பினரையும் விடுதியின் பாதுகாவலர்கள் அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, மோட்டார் சைக்கிளில் சென்ற யான்சி மீது முரண்பாட்டில் ஈடுபட்ட தரப்பைச் சேர்ந்த குழுவினர் காரை வேகமாக ஏற்றி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

அதில் பலத்த காயமடைந்த யான்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அதே மோட்டார் சைக்கிளில் பயணித்த 17 வயதுடைய சிறுமி ஒருவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கீழ்பாக்கம் அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்தின் பின்னர் அவர் சுயநினைவை இழந்திருந்ததாக வைத்தியர்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையிலே குறித்த சிறுமியும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக கோயம்பேடு பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய பாலகுரு, அவருடைய நண்பர் சுமன் சக்திவேல் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் விபத்தினை ஏற்படுத்திய காரில் அரசியல் கட்சியொன்றின் கட்சி கொடி கட்டப்பட்டு இருந்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்தும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், குறித்த கேளிக்கை விடுதிக்கு முத்திரையிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button