பலதும் பத்தும்

இந்தியாவில் தங்கம் தரும் ஆறு – அனைவரையும் வியக்கவைக்கும் அதிசயம்!

இந்தியாவின் நதிகள் புனிதமானவை மட்டுமல்ல, அவை தங்களுக்குள் விலைமதிப்பற்ற தங்கம் போன்ற செல்வங்களையும் ஒளித்து வைத்திருக்கின்றன என்பது பலருக்கும் தெரியாத ஆச்சரியமான தகவல்.

இந்தியாவின் சில குறிப்பிட்ட ஆறுகளில், ஆற்று மணலோடு மிக நுண்ணிய தங்கத் துகள்களும் கலந்து வருகின்றன.

அப்படி இந்தியாவில் உள்ள ஆறுகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

நதிகளில் நீர் ஓடுவதைப் பார்த்திருக்கிறோம்; ஆனால் தங்கம் ஓடுவதைப் பார்த்திருக்கிறீர்களா?

ஆம், இந்தியாவில் உள்ள சில நதிகள் இன்றும் தங்களின் மணற்பரப்பில் மிகச் சிறிய தங்கத் துகள்களைச் சுமந்து வருகின்றன.

இப்போது தங்கம் விற்கும் விலைக்கு இந்த நதி எங்கே இருக்கு சொல்லுங்க.. உடனே போய்விடலாம் என்பதே பலரது யோசனையாக இருக்கும்.

இந்தியாவில் தங்கம் விளையும் நதிகளில் மிகவும் பிரபலமானது சுபர்ணரேகா (Subarnarekha) ஆறு. ‘சுபர்ணரேகா’ என்ற பெயருக்கே “தங்கக் கோடு” என்றுதான் பொருள்.

ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் வழியாக இந்த நதி பாய்கிறது.

தாதுக்கள் நிறைந்த நிலப்பரப்பைக் கடந்து வருவதால், இதன் மணலில் மிக நுண்ணிய தங்கத் துகள்கள் காணப்படுகின்றன.

இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், இன்றும் பழமையான முறைகளைப் பயன்படுத்தி ஆற்று மணலைச் சலித்து, அதில் இருக்கும் சிறிய தங்கத் துகள்களைச் சேகரித்து வருகின்றனர்.

மத்தியப் பிரதேசத்தில் உற்பத்தியாகும் சோன் நதி, உத்திரப் பிரதேசம் மற்றும் பீகார் வழியாகப் பாய்ந்து கங்கை நதியுடன் இணைகிறது.

பாறைகள் நிறைந்த மற்றும் தாதுகள் செழிப்பான பகுதிகள் வழியாகப் பாய்வதால், இந்த நதியின் படுக்கைகளிலும் தங்கத் துகள்கள் காணப்படுகின்றன.

கங்கையின் முக்கியமான துணை ஆறுகளில் ஒன்றான இதில், பல ஆண்டுகளாகவே தங்கம் கண்டெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மத்தியப் பிரதேசம் மற்றும் உத்திரப் பிரதேசம் மாநிலங்களில் பாயும் மற்றுமொரு முக்கியமான நதி ‘கென்’. பாறைகள் நிறைந்த நிலப்பரப்பில் பாயும் இந்த நதியில், இயற்கையான வானிலை மாற்றங்களால் பாறைகள் சிதைந்து, அதிலுள்ள தங்கத் துகள்கள் மணலோடு கலக்கின்றன.

இந்த நதி தங்கம் தருவதோடு மட்டுமல்லாமல், அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள விவசாயம் மற்றும் வனவிலங்குகளின் வாழ்வாதாரத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.

பண்டைக் காலத்தில், நதிக்கரை ஓரம் வசிக்கும் மக்கள் எந்தவித நவீன இயந்திரங்களும் இன்றி, வெறும் சல்லடைகள் மற்றும் பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி மணலிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுத்தனர்.

இருப்பினும், ஆற்றில் கிடைக்கும் தங்கத்தின் அளவு மிகவும் குறைவாகவே இருக்கும் என்பதால், இது வணிக ரீதியாகப் பெரிய லாபத்தைத் தராவிட்டாலும், ஒரு வியப்பூட்டும் இயற்கை நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button