பவர்பேங்க்கால் விமானங்களுக்கு ஆபத்து – வெளியான அதிர்ச்சி எச்சரிக்கை!

உலகெங்கிலும் இயக்கப்படும் விமானப் பயணங்களின் போது ‘பவர் பேங்க்’ (Power Bank) காரணமாக கடுமையான பாதுகாப்புப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருவதாக பிரிட்டிஷ் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை எச்சரித்துள்ளது.
விமான நிறுவனங்களால் விதிக்கப்பட்டுள்ள விதிகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு அந்த அதிகாரசபை பயணிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த கையடக்க சார்ஜர்கள் அதிகளவில் சூடாகவோ அல்லது தீப்பற்றவோ கூடும் என்பதால், அவற்றை முறையாக கையாளாவிட்டால் கடுமையான ஆபத்தாக மாறக்கூடும் என்று அந்த ஒழுங்குமுறை அமைப்பு தெரிவித்துள்ளது.
பவர் பேங்க்களை பிரதான பயணப் பொதிகளுக்குள் (Checked luggage) வைப்பதைத் தடை செய்வது போன்ற விதிகள் சாதாரணமாக விதிக்கப்பட்டவை அல்ல என்றும், அவை பாதுகாப்பிற்காக விதிக்கப்பட்ட மிக முக்கியமான விதிகள் என்றும் அங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் ஜொனாதன் நிக்கல்சன் குறிப்பிடுகையில், பயணிகள் கண்டிப்பாக பவர் பேங்க்களை தங்களது கைப்பைக்குள் (Hand luggage) மட்டுமே கொண்டு செல்ல வேண்டும் என்றும், ஒரு நபர் இரண்டு பவர் பேங்க்களை மட்டுமே கொண்டு செல்ல முடியும் என்றும் கூறினார்.
அதேபோல், விமானப் பயணத்தின் போது அவற்றை பயன்படுத்துவதையோ அல்லது மீண்டும் சார்ஜ் செய்வதையோ தவிர்க்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் அவை அதிகளவில் சூடாகும் அபாயம் அதிகரிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த வாரம் எகிப்திலிருந்து லண்டன் நோக்கிப் பறந்து கொண்டிருந்த ‘ஈஸிஜெட்’ (easyJet) விமானம் ஒன்று, அவசரமாக ரோம் நகரை நோக்கித் திருப்பப்பட்டமைக்கும், பயணி ஒருவர் தனது பவர் பேங்க் ஒன்றை விமானத்தின் சேமிப்பகத்தில் இருந்த பயணப் பொதிக்குள் வைத்திருந்ததே காரணமாகும்.
இதன்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தை அவசரமாக தரையிறக்க நேரிட்டதுடன், பயணிகள் இரவு முழுவதும் அங்கேயே தங்கியிருக்க வேண்டியும் ஏற்பட்டது.
லித்தியம்-அயன் (Lithium-ion) பேட்டரிகளைக் கொண்ட இவ்வாறான சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளமையுடன், அது தொடர்பான விபத்துகளும் அதிகரித்து வருவதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அவர்களின் தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் மட்டும் பேட்டரிகள் அதிகளவில் சூடாவது தொடர்பான சம்பவங்கள் வாரத்திற்கு சராசரியாக இரண்டு விமானப் பயணங்களில் பதிவாகியுள்ளன.
இருப்பினும், இது குறித்து பொதுமக்களிடையே உள்ள விழிப்புணர்வு இன்னும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதுடன், பெரும்பாலான பயணிகள் இவ்வாறான விதிகள் இருப்பதை அறிந்திருந்த போதிலும், அந்த விதிகள் என்ன என்பது குறித்து முறையான புரிதல் இல்லை என்பது கணக்கெடுப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
![]()